இனாம் சமயபுரம் ஆதி மாரியம்மன் கோவிலில் பூச்சொரிதல் விழா தொடக்கம்
திருச்சி, பிப். 9 இனாம் சமயபுரம் ஆதி மாரியம்மன் கோவிலில் மாசி மாத தேரோட்டத்தை முன்னிட்டு பூச்சொரிதல் விழா தொடங்கியது.
பிரசித்தி பெற்ற அம்மன் தலங்களுள் முதன்மையானது சமயபுர மாரியம்மன் கோயில்.இந்த கோயில் எழுந்தருளுவதற்கு முன்பு மாரியம்மன் இனாம் சமயபுரத்தில் கோயிலில் குடி கொண்டு பக்தர்களுக்கு அருள்பாலித்தார் என்பது நம்பிக்கை.
இதனால் இனாம் சமயபுரத்தில் உள்ள கோயில் ஆதி மாரியம்மன் கோயில் என அழைக்கப்படுகிறது. இந்த கோயிலில் ஆண்டுதோறும் மாசி மாதா தேரோட்டத்தை முன்னிட்டு, தை மாதம் கடைசி ஞாயிற்றுக்கிழமை பூச்சொரிதல் விழா ஒவ்வொரு ஆண்டும் வெகு விமரிசையாக நடைபெறும். அந்த வகையில் இந்த ஆண்டிற்கான பூச்சொரிதல் விழா இன்று விமரிசையாக தொடங்கியது.
இவ்விழாவினை முன்னிட்டு, சமயபுரம் மாரியம்மன் கோவில் இணை ஆணையர் சூரிய நாராயணன் தலைமையில் கோவில் அர்ச்சகர்கள், பணியாளர்கள் உள்ளிட்டோர் பூக்களை தட்டுகளில் சுமந்து மேள, தாளங்கள் முழங்க ஊர்வலமாக தேரோடும் வீதி வழியாக கோயிலுக்கு எடுத்து வந்தனர். இதனைத் தொடர்ந்து கோவில் அர்ச்சகர் பூக்களை அம்மனுக்கு சாற்றினார். பின்னர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
மேலும், சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்தனர். அதன் பின்னர் வரும் 15ஆம் தேதி 2வது வார பூச்சொரிதல் விழாவும், 22ஆம் தேதி 3வது வார பூச்சொரிதல் விழாவும் நடைபெற உள்ளது. முக்கிய நிகழ்வான மாசிமாத தேரோட்ட விழா வரும் மார்ச் 1ஆம் தேதி நடைபெற உள்ளது.