சட்டவிரோத மின்வேலியால் 12 வயது சிறுமி மீது மின்சாரம் தாக்கிய சம்பவம் : பொதுமக்கள் சாலை மறியல்
திருச்சி, ஜூன் 26 சட்டவிரோத மின்வேலியால் 12 வயது சிறுமி மீது மின்சாரம் தாக்கிய சம்பவம் : துறையூரில் நள்ளிரவில் பொதுமக்கள் சாலை மறியல்
திருச்சி மாவட்டம், துறையூர் ஆத்தூர் சாலையில் உள்ள தனியாருக்கு சொந்தமான “தாய்க்கோயில்” வளாகத்தில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படும் மின்வேலியில் சிக்கி 12 வயது சிறுமி மின்சாரம் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து பொதுமக்கள் நள்ளிரவில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
துறையூர் மேட்டுத்தெருவைச் சேர்ந்த நகர்மன்ற 2-வது வார்டு உறுப்பினர் நித்தியா, தனது 12 வயது மகள் லக்ஷனா மற்றும் தாயாருடன் வழக்கம்போல் நடைபயிற்சிக்குச் சென்றிருந்தார். அப்போது தாய்க்கோயில் வளாக நுழைவாயில் அருகே அமர்ந்திருந்த சிறுமி லக்ஷனாவை திடீரென மின்சாரம் தாக்கியதாக கூறப்படுகிறது. உடனடியாக சிறுமி துறையூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். பின்னர் சம்பவ இடத்தை பார்வையிட்ட உறவினருக்கும் மின்சாரம் தாக்கியுள்ளது.
இதுகுறித்து தகவல் அறிந்த மின்வாரிய அதிகாரிகள் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டபோது, வளாகத்தின் முன்புறம் மற்றும் சுற்றுப்பகுதிகளில் சட்டவிரோதமாக மின்வேலி அமைக்கப்பட்டிருந்ததும், அதற்கு மின்வாரியம் அல்லது காவல்துறையிடம் எந்தவித அனுமதியும் பெறப்படவில்லை என்பதும் தெரியவித்தனர்.
மேலும், அனுமதிக்கப்பட்ட மின்சக்தியை விட அதிகளவு மின்சாரம் பயன்படுத்தப்பட்டதாகவும், பொதுமக்கள் அதிகம் நடமாடும் பகுதியில் இவ்வாறு மின்வேலி அமைப்பது சட்ட விதிமீறல் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
சம்பவம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர், வளாக உரிமையாளர் சுரேஷ்குமாரை தொடர்புகொள்ள முயன்றபோதும், அவர் செல்போனை அணைத்துவிட்டதாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள் இரவு 11 மணியளவில் தாய்க்கோயில் முன்பு திடீர் சாலை மறியலில் ஈடுபட்டு, சம்பந்தப்பட்ட நபர் மீது உடனடி சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். சாலை மறியல் ஈடுபட்டவர் உடன் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினார் மேலும் அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தது தொடர்ந்து சாலை மறியல் கைவிடப்பட்டது
இதற்கிடையில், இந்த வளாகம் நகராட்சியின் உரிய அனுமதியின்றி கட்டப்பட்டதாகவும், நகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரி பல ஆண்டுகளாக செலுத்தப்படவில்லை என்றும் சில நகர்மன்ற உறுப்பினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
சம்பவம் தொடர்பாக துறையூர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சட்டவிரோதமாக மின்வேலி அமைத்தது, கட்டிட அனுமதி மற்றும் வரி முறைகேடுகள் குறித்து சம்பந்தப்பட்ட துறைகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.