தனியார் கல்லூரி நிருவாகத்தை கண்டித்து இந்திய மாணவர் அமைப்பினர் காத்திருப்பு போராட்டம்
திருச்சி, ஜூலை 18 திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள காட்டூர் பகுதியில் இயங்கும் உருமு தனலட்சுமி கல்லூரியில் இளநிலை பட்டப்படிப்பு (யு.ஜி)படித்து வந்த இந்திய மாணவர் சங்க மாணவர்களை முதுகலை பட்டப்படிப்பில் (பீஜி) சேர்ப்பதற்கு தடை விதித்த கல்லூரி நிர்வாகத்தை கண்டித்து இந்திய மாணவர் சங்கம் அமைப்பினர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடுவதாக சுவரொட்டிகள் ஒட்டியதால் இன்று காலை திடீரென்று கல்லூரிக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து திடீரென்று விடுமுறை அளிக்கப்பட்டதால் கல்லூரி வந்த மாணவர்கள் திரும்பிச் செல்லும் நிலை ஏற்பட்டது இதனைத் தொடர்ந்து இந்திய மாணவர் சங்கத்தினர் மற்றும் மாணவர்கள் இணைந்து கல்லூரி வாயில் முன் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதே கோரிக்கையை வலியுறுத்தி துவாக்குடி அருகில் உள்ள அரசு கலைக் கல்லூரியில் இந்திய மாணவர் சங்க மாணவர்கள் கல்லூரி வாயில் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்