ஒரே இரவில் 7 கோவில்களில் நகை, பணம் திருட்டு
திருச்சி, ஜன.10 முசிறி மற்றும் துறையூர் தாலுகாவில் ஒரே இரவில் ஏழு கோயில்களில் திருட்டு சம்பவங்கள் நடைபெற்றுள்ளன.
திருச்சி மாவட்டம் முசிறி அருகே வடமலைப்பட்டி மாரியம்மன் கோயில் எண் கருப்பம்பட்டி மாரியம்மன் கோயில், துறையூர் தாலுகாவில் வெங்கடேசபுரம் மாரியம்மன் கோயில் மற்றும் பால மாரியம்மன் கோயில் கலிங்கமுடையான்பட்டி மெய்யம்பட்டி விசுவாம்பாள், சமுத்திரம் கிராமங்களில் உள்ள மாரியம்மன் கோயில்களில் நேற்று நள்ளிரவு பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் கோயிலில் வைக்கப்பட்டிருந்த உண்டியல் மற்றும் அம்மன் கழுத்தில் அணிவிக்கப்பட்டு இருக்கும் தங்கத் தாலி ஆகியவற்றை திருடி சென்றுள்ளனர்.
காலையில் கோயிலுக்குச் சென்ற பூசாரிகள் திருடர்களின் கைவரிசையை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த கிராம மக்கள் தா.பேட்டை மற்றும் துறையூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற காவல்துறையினர் திருட்டு நடைபெற்ற இடத்தை பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
ஒரே நாள் இரவில் முசிறி தாலுகாவில் மூன்று கோயில்களும், துறையூர் தாலுகாவில் நான்கு கோயில்களும் திருட்டு நடைபெற்ற சம்பவம் நடைபெற்றது. மேலும் திருட்டு நடைபெற்ற கோயில்கள் ஒரே வழித்தடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
திருட வந்தவர்கள் உண்டியலுடன் திருடிச் சென்றுள்ளதால் ஒன்றுக்கும் மேற்பட்ட நபர்கள் வாகனங்களில் வந்து இந்த திருட்டில் ஈடுபட்டிருக்க கூடும் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர். இதனால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.