மணப்பாறை அரசு மருத்துவமனையை மேம்படுத்த வேண்டும்: அமைச்சரிடம் எம்.எல்.ஏ. கோரிக்கை
திருச்சி, ஆக.6 மணப்பாறை மக்களின் மருத்துவ வசதிகளை மேம்படுத்த வலியுறுத்திய சட்டமன்ற உறுப்பினர் ரா. கதிரவன்
மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் ரா. கதிரவன், மாண்புமிகு மருத்துவம், மருத்துவக் கல்வி மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண்ராஜை நேரில் சந்தித்து, மணப்பாறை சட்டமன்றத் தொகுதியின் முக்கிய மருத்துவத் தேவைகள் குறித்து விரிவாக கோரிக்கை மனு வழங்கினார்.
அதில், மணப்பாறை காமராஜர் அரசு மகப்பேறு மருத்துவமனையில் நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப போதிய படுக்கை வசதி இல்லாததால் பொதுமக்கள் பெரும் சிரமத்தை எதிர்கொள்வதாக சுட்டிக்காட்டி, தற்போது இயங்கி வரும் மருத்துவமனை கட்டிடத்தின் மீது மேலும் இரண்டு தளங்கள் அமைத்து படுக்கை வசதிகளை விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தினார்.
மேலும், வையம்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தை அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்தி, அப்பகுதி மக்களுக்கு தரமான மருத்துவ சேவைகள் கிடைக்க வழிவகை செய்ய வேண்டுமெனவும் கோரிக்கை வைத்தார்.
அத்துடன், மேற்கண்ட கோரிக்கைகள் தொடர்பாக மாண்புமிகு அமைச்சர் அவர்கள் மணப்பாறை மற்றும் வையம்பட்டி பகுதிகளுக்கு நேரில் வந்து ஆய்வு மேற்கொள்ளவும் கேட்டுக்கொள்ளப்பட்டது.
கோரிக்கைகளை கவனமாக கேட்டறிந்த மாண்புமிகு அமைச்சர் நேரில் ஆய்வு மேற்கொண்டு, தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று உறுதியளித்தார்.