கிராமப்புற மாணவ, மாணவிகளுக்கு தற்காப்பு கலைப்பயிற்சி
திருச்சி, டிச.30 கிராமப்புற மாணவ, மாணவிகளுக்கு இலவச தற்காலைப்பு கலைப்பயிற்சியை தன்னார்வலர்கள் அளித்து ஊக்குவித்து வருகின்றனர்.
ஆரம்ப காலங்களில் சிலம்பம், யோகா, காராத்தே உள்ளிட்ட பல்வேறு கலைகள் கிராமங்களில் பெரும்பாலானோரிடம் இருந்து வந்தது. ஆனால் தற்போது இந்த கலைகள் பெரும்பாலும் குறைந்து மொபைல் போனே ஆக்கிரமித்து விட்டது. இருப்பினும் பெண்கள், இளம் தலைமுறைக்கு தற்காப்பு அவசியம் என்பதன் அடிப்படையில் பல்வேறு கிராமங்களை தேர்வு செய்து அதில் உள்ள பெண்கள் மற்றும் மாணவர்களுக்கு தனியார் அமைப்பை சேர்ந்த இளைஞர்கள் தன்னார்வமுடன் எவ்வித கட்டணமும் இன்றி சிலம்பம், காராத்தே உள்ளிட்ட பயிற்சிகளை அளித்து வருகின்றனர். அதன் படி திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த தாதகவுண்டம்பட்டி, ஆமணக்கம்பட்டி பொடங்குப்பட்டி, தாதனூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த மாணவ மாணவிகளுக்கு தனியார் அமைப்பு கடந்த ஒரு ஆண்டுகளுக்கும் மேலாக பயிற்சி அளித்து வருகின்றனர்.
இதன் தொடர்ச்சியாக மாணவ – மாணவிகளை ஊக்குவிக்கும் பொருட்டு சிலம்பம், யோகா மற்றும் கராத்தே போட்டிகள் நடைபெற்றது. இதில் வெற்றி பெற்ற மாணவ – மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினர். பெண்கள் பாலியல் சீண்டலுக்கு ஆளாகி வரும் இந்த சூழலில் தற்காப்பு கலையான சிலம்பம், கராத்தே உள்ளிட்ட பயிற்சிகள் கிராமப்புற மாணவ – மாணவிகளுக்கு அளிக்கப்பட்டு வருவது மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.