மாநகராட்சி – ஊராட்சி பகுதிகளில் “உங்களுடன் ஸ்டாலின் முகாம்” : அமைச்சர் அன்பில் மகேஸ் தொடங்கி வைத்தார்
திருச்சி, செப். 25 திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மாநகராட்சி மற்றும் ஒன்றியத்திற்கு உட்பட்ட ஊராட்சி பகுதிகளில் நடைபெறும் உங்களுடன் ஸ்டாலின் முகாம்களை துவக்கி வைத்து பணிகளை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆய்வு செய்தார் .
திருவரம்பூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினரும் தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தனது தொகுதிக்குட்பட்ட திருச்சி மாநகராட்சி 39 வது வார்டு பகுதியில் வசிக்கும் சுமார் 30,000 மேற்பட்ட பொதுமக்கள் பயன்பெறும் வகையில் தனியார் திருமண மண்டபத்தில் இன்று நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாமினை குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைத்து கலைஞர் உரிமைத்தொகை, மற்றும் முகாமில் கலந்து கொண்ட அனைத்து துறைகளையும் ஆய்வு செய்து பொதுமக்களில் இருந்து பெறப்படும் மனுக்கள் குறித்தும் அதற்கு தீர்வு காண்பது குறித்தும் துறை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
இந்த முகாமில் வருவாய்துறை மூலம் 3 பேருக்கு நத்தம் பட்டா திருத்தலுக்கான அரசாணையையும் மேலும் இதே போல் மாநகராட்சி சார்பில் சுமார் 5 பேருக்கு வீட்டு வசதி ரசீது பெயர் மாற்றத்திற்கான நகலையும் வழங்கினார்.
இதே போல் திருவெறும்பூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட சோழமாதேவி ஊராட்சியில் ராஜராஜேஸ்வரி ஆலயம் அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாமில் கலந்து கொண்டு வயதானவர்கள் மற்றும் முதியோர்களிடம் அனைத்து உதவித்தொகைகளும் கிடைக்கப் பெறுகிறதா என்றும் உங்களது குறைகள் தீர்க்கப்படுகிறதா என்றும் கேட்டறிந்தார்.
இதனை அடுத்து வருவாய் துறை மூலம் சோழமாதேவியை சேர்ந்த மூன்று பேருக்கு பட்டா மாறுதலுக்கான ஆணையையும், பொது சுகாதாரத் துறையின் கீழ் நவல்பட்டு அரசு மருத்துவமனை மூலம் சுமார் மூன்று கர்ப்பிணி பெண்களுக்கு இலவச ஊட்டச்சத்து பெட்டகத்தையும் வழங்கினார் தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர்
இந்த முகாம்களில் மாநகர செயலாளர் மண்டல குழு தலைவருமான மதிவாணன், பகுதி கழகச் செயலாளர் சிவக்குமார், மாமன்ற உறுப்பினர் ரேக்ஸ் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் , வட்டார வளர்ச்சி அலுவலர் அண்ணாதுரை மற்றும் திருவரம்பூர் தெற்கு ஒன்றிய செயலாளர் கங்காதரன் உட்பட அரசு அதிகாரிகள் கட்சி நிர்வாகிகள் பொதுமக்கள் என ஏராளமானோர் இந்த முகாம்களில் கலந்து கொண்டனர்.