சக்தி விநாயகருக்கு சீர்வரிசை எடுத்து வந்த இஸ்லாமியர்கள்!
திருச்சி, டிச.8 சக்தி விநாயகருக்கு சீர்வரிசை எடுத்து வந்த இஸ்லாமியர்கள் :
திருச்சி அரியமங்கலம் காமராஜ்நகரில் அமைந்துள்ள சக்தி விநாயகர் ஆலயத்தில் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
இந்த விழாவில் மத நல்லிணக்கத்தை போற்றும் வகையில் இஸ்லாமியர்கள் சக்தி விநாயகருக்கு பூஜை பொருட்கள், பழங்கள், மாலைகள் அடங்கிய சீர்வரிசை பொருட்களை மங்கள வாத்தியத்துடன் எடுத்து வந்தனர். அவர்களை கோயில் நிர்வாகிகள் இருகரம் கூப்பி வரவேற்றனர்.
தொடர்ந்து இஸ்லாமியர்கள் எடுத்து வந்த சீர்வரிசை பொருட்களை கொண்டு சக்தி விநாயகருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது.
இதில் இஸ்லாமியர்கள் கலந்து ஆரத்தி எடுத்துக் கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து ஆலயத்தில் வழங்கப்பட்ட அன்னதானத்தை இஸ்லாமியர்களுக்கு அளித்தனர். அதனை வாங்கி சாப்பிட்டு ஒருவருக்கொருவர் தங்களது மகிழ்வையும் அன்பையும் வெளிப்படுத்தினர். மத நல்லிணக்கத்தை போற்றும் வகையில் நடந்த நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.