திருச்சி ஆவின் நிறுவனத்தின் செயல்பாடுகள் : மாவட்ட ஆட்சியர் ஆய்வு
திருச்சி, செப்.2 திருச்சி கொட்டப்பட்டு ஆவின் நிறுவனத்தில் நடைபெற்று வரும் பால் உற்பத்தி பணிகள் மற்றும் செயல்பாடுகளை கால்நடை பால்வ ளத்துறை ஆணையர் மற்றும் மேலாண்மை இயக்குநர் அஜய் யாதவ், மாவட்ட ஆட்சியர் பிரத்திக் தாயள் ஆகியோர் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.
எவ்வித புகார்களுக்கும் இடமின்றி தரமான ஆவின் பாலை பொது மக்களுக்கும், ஆவின் பால் நுகர்வோருக்கும் விநியோகம் செய்வதை உறுதி செய்திட உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தினர்.
மேலும், திருச்சிராப்பள்ளி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியா ளர்கள் ஒன்றியத்தின் பொருளாதாரத்தை அதிகரிக்கும் நோக்கில், நபார்டு உதவி திட்டத்தின் கீழ் புதிதாக 6000 லிட்டர் கொள்ளளவு கொண்ட அதிநவீன ஜஸ்கிரீம் தயாரிக்கும் இயந்திரம் மற்றும் 10 மெ.டன் கொள்ளளவு கொண்ட பால் உபபொருள்கள் தயாரிக்கும் ஆலையை பார்வையிட்டு அதன் செயல்பாடுகளை கேட்டறிந்தனர்.
தொடர்ந்து, இந்த ஆலையில் ரூ.45 லட்சம் மதிப்பில் நிறுவப்பட்டுள்ள தானியங்கி கப் தயிர் தயார் செய்திடும் இயந்திரத்தின் செயல் பாட்டையும் அவர்கள் தொடங்கி வைத்தனர். இந்த அலகு மூலம் நாள் ஒன்றுக்கு 500 லிட்டர் கப் தயிர் தயார் செய்ய இயலும். மேலும், இங்கு தயாரிக்கப்படும் பால் உபபொருள்கள் ஒன்றியத்தின் முகவர் கள் மூலம் மாவட்டத்தில் உள்ள நுகர்வோர்களுக்கு விற்பனையை அதிகரிக்கவும், ஆவின் பால் தரம் மற்றும் உற்பத்தியின் காலாவதி தேதிகள் சரியான முறையில் அச்சிடப்பட்டுள்ளதா எனவும், ஆவின் உபபொருள்களின் தரம் குறித்து உறுதி செய்து ஆய்வு செய்தனர்.
இந்த ஆய்வில், ஆவின் பொது மேலாளர் சுந்தரவடிவேல் (பொ), துணைப்பதிவாளர்கள் (பால்வளம்) நாகராஜ், சிவக்குமார் மற்றும் துறைசார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.