திருச்சி – சேலம் நெடுஞ்சாலையில் பொதுமக்கள் சாலை மறியல்
குடிநீர், மின்சாரம் இல்லாமல் பொதுமக்கள் அவதி. ஆத்திரமடைந்த பொதுமக்கள் திருச்சி சேலம்நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே குணசீலத்தில் குடிநீர், மின்சாரம், இல்லாததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் திருச்சி சேலம் நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
முசிறி தாலுக்கா குணசீலம் ஊராட்சியில் 3 ஆயிரத்திற்க்கும் மேற்ப்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.இந்தப் பகுதியில் உள்ள துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்காக காலை 9:45 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை என மின்வாரிய அலுவலகம் அறிவித்திருந்தது.
ஆனால் பராமரிப்பு பணிகள் முடியாமல் 7 மணிக்கு மேலாகியும் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருந்ததால் மின்சாரம் வழங்க முடியவில்லை. மேலும் மின்சாரம் இல்லாததால் குடிநீர் மற்றும் அடிப்படை தேவைகளுக்கு தண்ணீர் இல்லாமல் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மிகுந்த அவதியுற்றனர்.இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி பொதுமக்கள் ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டும் தொடர்ந்து திருச்சி சேலம் நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்த முசிறி மின்வாரிய அலுவலகத்தின் இளநிலை பொறியாளர் ஐயப்பன் மற்றும் வாத்தலை காவல் நிலைய காவல் ஆய்வாளர் பாலாஜி ஆகியோர் சம்பவ இடத்திற்க்கு விரைந்து சென்று பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர் மேலும் பராமரிப்பு பணிகள் முடியும் தருவாயில் உள்ளதால் விரைவில் மின்சாரம் வழங்கப்படும் என உறுதி அளித்ததையடுத்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.