மணப்பாறையில் நியாயவிலைக்கடைகள், நிழற்குடைகள், சமுதாய கூடம் : சட்டமன்ற உறுப்பினர் திறந்து வைத்தார்
திருச்சி, ஜூன் 5 திருச்சி மாவட்டம், மணப்பாறை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அமயபுரம் களத்துப்பட்டி, சடையம்பட்டி, தவளைவீரன்பட்டி, செக்கனம், வையம்பட்டி, மீனாட்சிபுரம் உள்ளிட்ட 10 இடங்களில் நியாய விலைக் கட்டிடங்கள், எண்டபுளி, புத்தாநத்தம், இடையபட்டி பகுதிகளில் பயணிகள் நிழற்குடைகள், துவரங்குறிச்சி பூதநாயகியம்மன் கோவிலில் நாடக மேடை, நெல்லிப்பட்டியில் சமுதாயக் கூடம், வளநாடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு ஜெனரேட்டர் வசதி உள்ளிட்ட பல்வேறு புதிய கட்டிடங்கள் ரூ.1.71 கோடி மதிப்பில் கட்டப்பட்டு பணிகள் முடிவுற்ற நிலையில் மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டது.
மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் அப்துல் சமது தொகுதி முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒரேநாளில் அனைத்து புதிய கட்டிடங்களையும் திறந்து வைத்தும் புதிய திட்டங்களையும் துவக்கி வைத்தார். இதேபோல் அமயபுரம் ஊராட்சி களத்துப்பட்டியில் புதிய நியாய விலைக் கட்டிடம் திறப்பு விழாவில் கலந்து கொண்ட சட்டமன்ற உறுப்பினர் அப்துல் சமது ரிப்பன் வெட்டி கட்டிடத்தை திறந்து வைத்தார். பின்னர் குத்து விளக்கேற்றி அங்கு வைக்கப்பட்டிருந்த முத்தமிழறிஞர் கலைஞர் உருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதனைத்தொடர்ந்து மக்களுக்கு பொது விநியோகத்திட்ட பொருட்களை வழங்கி விற்பனையை தொடங்கிவைத்தார்.
விழாவில் கூட்டுறவு சங்க அலுவலர்கள், வையம்பட்டி வடக்கு ஒன்றிய செயலாளர் சீரங்கன்,முன்னாள் ஒன்றியகுழு தலைவர் குணசீலன், திமுகவினர் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.