பச்சமலையில் ரூ.6.60 கோடியில் நலத்திட்ட உதவிகள் : அமைச்சர் உதயநிதி வழங்கினார்
திருச்சி, ஆக.1 திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள பச்சமலை புத்தூர் கிராமத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமைச்சர் உதயநிதி ரூ.6.60 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை 1800 பயனாளிகளுக்கு வழங்கினார்.
துறையூர் அருகே உள்ள பச்சமலை புத்தூர் கிராமத்தில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நலத்திட்ட உதவிகளை வழங்கி உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர் பச்சமலை பகுதியில் அங்கன்வாடி மையம் புதியதாக அமைக்கப்படும் என்றும் பச்சமலை பகுதி மக்களின் நீண்ட கால கோரிக்கையான பச்சை மலையில் உள்ள 50 குக்கிராமங்களை ஒருங்கிணைத்து புதிய ஊராட்சி ஒன்றியம் அமைக்க ஏற்பாடு செய்யப்படும் என பேசினார்.
மேலும் ரூ.6.60 கோடி மதிப்பிலான இலவச வீட்டு மனை பட்டா கலைஞரின் கனவு இல்லம் திட்டம் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் வழங்குதல் தீவனப்புல் நறுக்கும் கருவி கரவை மாடுகள் வழங்குதல் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை 1800 பயணாளிகளுக்கு வழங்கினார். மேலும் இந்நிகழ்வில் அமைச்சர்கள் கே .என். நேரு, மகேஷ் பொய்யாமொழி, சிவசங்கர் எம்எல்ஏக்கள் ஸ்டாலின் குமார், காடுவெட்டி தியாகராஜன், மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.