மாவட்ட அளவிலான விவசாயிகளுடன் விஞ்ஞானிகள் கலந்துரையாடல்
திருச்சி, ஜூன் 2 திருச்சி மாவட்டம் லால்குடி அருகே மும்முடி சோழ மங்கலத்தில் உள்ள ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையம் வேளாண்மை துறை அட்மா திட்டத்தின் கீழ் மாவட்ட அளவிலான விவசாயிகளுடன் விஞ்ஞானிகள் கலந்துரையாடல் இரண்டு நாட்கள் நடைபெற்றது.
இதில் லால்குடி வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் திருமதி சத்யபிரியா கலந்து கொண்டு பேசுகையில் கோடை உழவு செய்தல்,பசுந்தாள் உர பயிர்கள் விதைப்பு செய்தல், சான்று பெற்ற விதைகள் பயன்படுத்துதல், இலை வண்ண அட்டை பயன்படுத்தி
தழைச்சத்து மேலாண்மை செய்தல், மண்புழு உரம் பயன்படுத்துதல் பற்றி விரிவாக விளக்கிக் கூறினார். வேளாண்மை அலுவலர் கௌசல்யா பேசுகையில் திரவ வடிவிலான உயிர் உரங்கள் பயன்படுத்துதல், நுண்ணூட்ட உரம் பயன்படுத்துதல், களை மேலாண்மை, வேளாண்மை துறையில் செயல்படுத்தப்படும் மானியத்திட்டங்கள் பற்றி விரிவாக விளக்கி கூறினார். வேளாண்மை கல்வி நிலையம் குமுளூர் டாக்டர் வினோத் பேசுகையில் குறுவை சாகுபடி நெல்லில் புதிய ரகங்கள் பயன்படுத்துதல், பல்வேறு நிலை விதை வகைகள் வல்லுனர் விதை, சான்று ,ஆதார விதை, உண்மை நிலை விதைகள் வேறுபாடு மற்றும் குணாதிசயங்கள் பற்றி விரிவாக விளக்கி கூறினார்.
கோனோ வீடர் கொண்டு களை மேலாண்மை செய்தல், நெற்பயிரில் நுண்ணூட்டசத்து குறைபாடு நிவர்த்தி செய்தல், ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறைகள், மண்புழு உரம் உற்பத்தி ,ஒட்டுண்ணி அட்டை பயன்படுத்துதல் , மேலும் நவீன சாகுபடி தொழில்நுட்பங்கள் பற்றி விரிவாக விளக்கி கூறினார். அட்மா திட்ட வட்டார தொழில்நுட்ப மேலாளர் சபரிச்செல்வன் விவசாயிகள் பயிற்சி கண்டுணர்வு சுற்றுலா செயல் விளக்கம் கலந்து கொள்ளும் விவசாயிகள் முன்னுரிமை பதிவேட்டில் பதிவு செய்து கொண்டு கலந்து கொள்ள கேட்டுக் கொண்டார். பாரதப் பிரதமரின் விவசாயிகள் கவுரவ நிதி திட்டத்தில் புதிய பயனாளிகள் இணைவதற்கு உண்டான வழிகாட்டு நெறிமுறைகள் , நில உடமை பதிவு செய்யும் முறைகள் பற்றி விரிவாக விவசாயிகளுக்கு விளக்கி கூறினார்.இதற்குண்டான ஏற்பாட்டினை உதவி தொழில் நுட்ப மேலாளர் கார்த்திக், தமிழ்மணி ஆகியோர் செய்து இருந்தனர். மேலும் இந்த கலந்துரையாடலில் லால்குடி வட்டாரத்தை சேர்ந்த 50 மேற்பட்ட பல முன்னோடி விவசாயிகள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.