மணப்பாறை அருகே ஆவணங்களின்றி எடுத்து செல்லப்பட்ட ரூ.2.28லட்சம் பறிமுதல்
திருச்சி, மார்ச் 28 திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த பிள்ளையார்கோவில்பட்டி அரச மரம் அருகே தேர்தல் பறக்கும் படை அதிகாரி தேவேந்திரன் தலைமையிலான பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிளை நிறுத்தி சோதனை செய்த போது அதில் ஒ ருலட்சத்து 44 ஆயிரத்து 480 ரூபாய் இருந்தது. ஆனால் அதற்கு உரிய ஆவணங்கள் இல்லாத நிலையில் பணத்தை பறிமுதல் செய்த தேர்தல் பறக்கும் படையினர் பின்னர் அதை மணப்பாறை வட்டாட்சியர் தனலெட்சுமியிடம் ஒப்படைத்தனர். இதே போல் குளித்தலை சாலையில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி ஜெனிபர் எலிசபெத் தலைமையிலான தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்ட போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்த போது அதில் 84500 ரூபாய் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்டது தெரியவந்தது.
இதையடுத்து தேர்தல் பறக்கும் படையினர் பணத்தை பறிமுதல் செய்து மணப்பாறை வட்டாட்சியர் தனலெட்சுமியிடம் ஒப்படைத்தனர். பிடிபட்ட பணம் கருவூலத்தில் செலுத்தப்பட்டது. மணப்பாறை தொகுதியில் நேற்று ஒரே நாளில் மட்டும் 4 இடங்களில் 6,25,570 ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.