மணப்பாறையில் குடிநீரில் கழிவுநீர் கலப்பு : நகராட்சி அதிகாரிகளுடன் பொதுமக்கள் வாக்குவாதம்
திருச்சி, செப். 25 மணப்பாறையில் புதுத்தெரு பகுதியில் கடும் துர்நாற்றத்துடன் காவிரி குடிநீர் விநியோகம் செய்யப்பட்டதால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் குடிநீரை காட்டி நகராட்சி அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
திருச்சி மாவட்டம், மணப்பாறை நகராட்சிக்குட்பட்ட புதுத்தெரு பகுதியில் இன்று காலை காவிரி குடிநீர் விநியோகம் செய்யப்பட்டது. அப்போது காவிரி குடிநீரில் இருந்து கடும் துர்நாற்றம் வீசியதுடன் கழிவு நீர் கலந்து இருந்தது. இதைப்பார்த்த அந்த பகுதி மக்களுக்கு குடிநீரை பிடிக்க கூட முடியாத நிலை ஏற்பட்டது.
மேலும் குடிநீரில் கழிவு நீர் கலந்து இருந்ததால் அந்த பகுதியே துர்நாற்றம் வீசியது. இதனால் ஆத்திரம் அடைந்த மக்கள் கடைவீதியில் காலிக்குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். அப்போது அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி அதிகாரிகள் வந்ததும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்படும் என்று கூறினர்.
இந்நிலையில் அங்கு வந்த நகராட்சி அதிகாரிகளிடம் பாட்டில்களில் பிடித்து வைத்திருந்த காவிரி குடிநீரை காட்டி மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். முறையான குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக கூறியதை அடுத்து மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.