தா.பேட்டை பெரிய மாரியம்மன் கோவிலில் சுவாமி பாலித்தல் நிகழ்ச்சி
திருச்சி, நவ.24- திருச்சி மாவட்டம், தா.பேட்டை பிள்ளாதுறையில் பெரியமாரியம்மன் கோவிலில் சுவாமி பாலித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. வருடந்தோறும் கார்த்திகை மாதம் நடைபெறும் சுவாமி பாலித்தல் நிகழ்ச்சியை முன்னிட்டு கிராம விநாயகர், செல்லாண்டியம்மன், உடைப்புவாய் கருப்பண்ண சுவாமி, சந்திகருப்பு, நாகர், விநாயகர், பெரியமாரியம்மன் உள்ளிட்ட தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
அதனைத்தொடர்ந்து பெரிய மாரியம்மன் மற்றும் சந்திகருப்பு ஆகிய தெய்வங்களுக்கு சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டு இளநீர், பாலை உடைத்து வைத்து சுவாமி பாலித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது விவசாயம் செழிக்கவும், மழை வேண்டியும், கர்நாடக காவிரி நீர் பிடிப்பு பகுதியில் நன்கு மழை பெய்யவும், குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்கவும், தொழில் வளம் மேம்படவும் சிறப்பு பூஜை நடைபெற்றது. பொதுமக்கள் மாவிளக்கு, தேங்காய், பழம் படைத்து பெரியமாரியம்மனை வழிபட்டனர்.