ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் உள்ளிட்ட படித்துறையில் மொட்டை அடிக்க இனி கட்டணம் இல்லை
108 வைணவத் தலங்களில் முதன்மையானதும் பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படுவது திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதர் திருக்கோவில் ஆகும். இக்கோவிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் வருகை புரிந்து வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று இந்து சமய அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு திருக்கோவில் பக்தர்கள் தங்கள் வேண்டுதல் பொருட்டு செய்யும் முடி காணிக்கை கட்டணம் வசூலிக்கக் கூடாது என அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.

இந்த அறிவிப்பை பக்தர்கள் அறியும் வண்ணம் உடனடியாக அறிவிப்பு பதாகை வைக்க இந்துசமய அறநிலையத்துறை ஆணையர் குமரகுரு அனைத்து கோயில்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பி இருந்தார். அதன்படி ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோயில் நிர்வாகம் சார்பாக முடி காணிக்கை செலுத்தும் இடமான அம்மா மண்டபம் காவிரிபடித்துறை, கொள்ளிடம் படித்துறை மற்றும் கோயிலின் மூன்று வாயில்களிலும் உடனடியாக பக்தர்கள் அறியும் வண்ணம் அறிப்விப்பு பதாகை வைக்கப்பட்டது