நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாமின் நிறைவு நாளில் கால்நடை மருத்துவ முகாம்
திருச்சி, செப்.8 நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாமின் நிறைவு நாளில் கால்நடை மருத்துவ முகாம் நடைபெற்றது.
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே குமுளூர் ஊராட்சியில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் வேளாண் பொறியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய மாணவர்களின் நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாம் பல்லபுரத்தில் ஏழு நாட்கள் நடைபெற்றது.
முகாமின் இறுதி நாளான செப்டம்பர் 7-ஆம் தேதி கால்நடை மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில் Dr. P. ரஞ்சித் கலந்துகொண்டு கால்நடைகளுக்குத் தடுப்பூசி செலுத்தியதுடன், கோடை காலத்தில் கால்நடைகளைப் பராமரிக்கும் முறைகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார். மேலும், நாய்க்கடி ஏற்படுவதற்கான காரணங்கள், அதைத் தடுக்கும் வழிமுறைகள், நாய்க்கடி ஏற்பட்டால் மேற்கொள்ள வேண்டிய முதலுதவி மற்றும் சிகிச்சை முறைகள் குறித்துப் பொதுமக்களுக்கும் நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்களுக்கும் விளக்கமளித்தார்.
தொடர்ந்து நடைபெற்ற நிறைவு விழாவில், நாட்டு நலப்பணித் திட்ட தன்னார்வலர் ஜனாஃபர் வரவேற்புரையாற்றினார். பேராசிரியர் முனைவர் A. வள்ளியம்மை மற்றும் பொறுப்பு முதன்மையர் முனைவர் S. A. ரம்ஜானி ஆகியோர் சிறப்புரையாற்றி மாணவர்களின் சமூகப் பணிகளைப் பாராட்டினர்.
ஏழு நாட்களில் நடைபெற்ற நிகழ்வுகள் குறித்த அறிக்கையை நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர் C. செந்தில் குமார் சமர்ப்பித்தார்.
இறுதியில் நாட்டு நலப்பணித் திட்ட தன்னார்வலர் வினோதினி நன்றியுரை கூறினார். இந்நிகழ்ச்சியில் கிராமப் பொதுமக்கள், கல்லூரிப் பேராசிரியர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் கலந்துகொண்டனர். இதனுடன் ஏழு நாட்கள் நடைபெற்ற நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாம் இனிதே நிறைவுற்றது.