திருவெறும்பூரில் நின்று செல்லும் ஜனசதாப்தி ரயிலுக்கு வரவேற்பு : துரை வைகோ எம்.பி. பங்கேற்பு
திருச்சி, அக்.15 மதிமுக தலைமை நிலைய செயலாளரும், திருச்சி எம்.பியுமான துரை வைகோ தெரிவித்துள்ளதாவது, திருவெறும்பூர் மக்களின் கோரிக்கைக்காக நான் மேற்கொண்ட தொடர் முயற்சிக்குப் பலனாக, திருச்சி – தாம்பரம் சிறப்பு இரயில் திருவெறும்பூர் இரயில் நிலையத்தில் இன்று (15.10.2025) முதல் நின்று செல்லும் என்ற அறிவிப்பை தென்னக இரயில்வேயிடமிருந்து பெற்றுள்ளோம்.
அதன் முதல் நாளில் தொகுதி மக்களோடு மக்களாக இணைந்து அவர்களின் மகிழ்ச்சியில் பங்கெடுக்க வேண்டும் என்பதற்காக, இன்று காலை 5:30 மணியளவில் கழகத் தோழர்களோடு துரைவைகோ ரயில் நிலையத்துக்கு வருகை தந்தார்.
அப்போது, மேள தாள நாகசுர மங்கல இசையோடு முதன்முதலாக வந்து நின்ற திருச்சி – தாம்பரம் சிறப்பு இரயிலை வரவேற்றதுடன், அதில், வந்திறங்கிய பயணிகளுக்கும், அதில் ஏறிப் பயணத்தைத் தொடங்கும் பயணிகளுக்கும் இனிப்புகள் வழங்கி, வாழ்த்துகளைப் பரிமாறிக்கொண்டதோடு, அவர்களோடு அதே இரயிலில் தஞ்சை வரை துரை வைகோ எம்.பி. பயணித்தார்.
இந்தப் பயணத்தில் பயணிகளுடனான உரையாடல்கள் மக்களின் நீண்டகால எதிர்பார்ப்பு நிறைவேறியதன் மகிழ்ச்சியைப் பிரதிபலித்தன. பலர், தங்கள் பயண நேரத்தை மிச்சப்படுத்துவதோடு, கட்டணச் செலவும் குறையும் என்று கூறி நன்றி தெரிவித்தனர்.
பெறுகிற வெற்றியில் சிறிதென்றோ பெரிதென்றோ ஒன்றுமில்லை. இனி எத்தனை மக்கள் இந்த இரயில் பயணத்தில் பயன்பெறுவர் என்பதில்தான் வெற்றியின் அளவு தீர்மானிக்கப்படும். இதனால் பயன்பெறும் இலட்சக்கணக்கான மக்களின் மகிழ்ச்சியும் வெற்றியுமே எனது வெற்றியாகக் கணக்கில் கொள்ளப்படும்.
இத்தகைய முயற்சிகள் மக்களின் அன்றாட வாழ்க்கையை எளிதாக்குவதோடு, பொது போக்குவரத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகின்றன என்பதை அறிந்துகொண்டேன் என்று கூறினார். .
இந்நிகழ்வில் துணைப் பொதுச்செயலாளர் டாக்டர் ரொஹையா, திருச்சி மாநகர் மாவட்டச் செயலாளர் வெல்லமண்டி இரா.சோமு, திருச்சி தெற்கு மாவட்டச் செயலாளர் மணவை தமிழ்மாணிக்கம், திருச்சி வடக்கு மாவட்டச் செயலாளர் டி.டி.சி.சேரன், பெரம்பலூர் மாவட்டச் செயலாளர் எஸ்.ஜெயசீலன், அரியலூர் மாவட்டச் செயலாளர் க.இராமநாதன், திருச்சி பால்பண்ணை துவாக்குடி சர்வீஸ் ரோடு கூட்டமைப்பு நிர்வாகி சக்திவேல் மற்றும் ஏராளமான கழகத் தோழர்கள் கலந்து கொண்டனர்.
அதேபோல, தஞ்சாவூர் ரயில் நிலையத்தில் தஞ்சை தெற்கு மாவட்டச் செயலாளர் வி.தமிழ்ச்செல்வன், தஞ்சை மாநகரச் செயலாளர் கோ.துரைசிங்கம் உள்ளிட்ட திரளான கழகத் தோழர்கள் வரவேற்றனர்.