மணப்பாறை கால்நடை சந்தையில் விற்பனை மந்தம்: வியாபாரிகள் வேதனை
திருச்சி, அக். 15 புகழ்பெற்ற மணப்பாறை கால்நடை சந்தையில் விற்பனையின்றி வேதனையோடு ஆடுகளை அழைத்து சென்ற வியாபாரிகள் – விவசாயிகள்
தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில் ஆடுகளின் விற்பனை கணிசமாக உயர்ந்து இருக்கும். விலையும் உச்சத்தை தொடும். ஆனால் திருச்சி மாவட்டம், மணப்பாறையில் உள்ள புகழ்பெற்ற கால்நடை சந்தைக்கு திண்டுக்கல், கரூர் , மதுரை, புதுக்கோட்டை, சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து நேற்று இரவு வாகனம் மூலம் ஆடுகளை அதிக அளவில் விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். அதிலும் சிறிய ஆடுகள் முதல் சுமார் 20 கிலோ எடையுள்ள ஆடுகள் வரை விற்பனைக்கு வந்திருந்த நிலையில் அதிகாலை முதல் மழை பெய்து வந்தது. இதனால் ஆடுகள் வாங்க வருபவர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்திருந்தது.
சுமார் ஒரு கோடிக்கு மேல் இன்று மட்டும் விற்பனை நடைபெற வேண்டிய நிலையில் சில லட்சங்களை கூட விற்பனை எட்டவில்லை. தீபாவளி பண்டிகை நெருங்கி விட்ட நிலையில் விற்பனையும், விலையும் உயர்ந்து இருக்கும் என்ற எதிர்பார்ப்புடன் வந்திருந்த விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் வேதனையுடன் ஆடுகளை திரும்பி அழைத்துச் சென்றனர்.