வீட்டின் பூட்டை உடைத்து 10 பவுன் நகை, 40 ஆயிரம் கொள்ளை – திருச்சி அருகே பரபரப்பு!
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே பாலையூர் ஊராட்சியில் உள்ள ஸ்ரீபுரம்புதூர் கிராமத்தில் வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 10 1/2 பவுன் நகை, ரூ. 40 ஆயிரத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.
ஸ்ரீபுரம்புதூர் நடுத்தெருவைசேர்ந்தவர் சின்னதுரை(55). இவரது மனைவி பிச்சையம்மாள். விவசாய கூலியான இவருக்கு இரண்டு வீடுகள் உள்ளது.ஓரு வீட்டில் வெள்ளாடுகளை வைத்து பராமரித்து வருவதால் இரவில் மனைவியுடன் அங்கேயே தங்கியுள்ளார். இவருடைய மகன் ஜீனத் குமார்(28) இவரின் மனைவி கோமதி இவர்களுக்கு 3 வயதில் மகிஷா என்ற பெண் குழந்தை உள்ளது.

ஜீனத்குமா் கோயம்புத்தூரில் தங்கி தனியார் கட்டுமான நிறுவனத்தில் மேற்பார்வையாளராக வேலை செய்து வருகிறார்.இவருடைய மனைவி மற்றும் குழந்தை மற்றொரு வீட்டில் தனியாக வசித்து வருகின்றனர். மகன் வசிக்கும் வீட்டின் இரண்டு அறைகளில் ஒரு அறையில் மருமகள்,பேரக்குழந்தை வசித்து வரும் நிலையில் மற்றொரு அறையில் சின்னத்துரை பீரோ மற்றும் பொருட்களை வைத்துள்ளார். இந்நிலையில் நேற்றிரவு அவரது வீட்டிற்கு வந்த மர்ம நபர்கள் மருமகள் இருந்த அறையின் வெளி தாழ்ப்பாளை பூட்டி விட்டு மற்றொரு அறையின் பூட்டை உடைத்து வீட்டிலிருந்த பீரோவை அலேக்காக தூக்கிக் கொண்டு வெளியே சென்ற மர்மநபர்கள் பீரோவை உடைத்து பீரோவிலிருந்த 10 1/2 பவுன் நகை மற்றும் 40 ஆயிரம் பணத்தை கொள்ளையடித்து விட்டுச் சென்றனர்.
இந்நிலையில் அதிகாலை 3 மணியளவில் கழிவறை செல்வதற்க்காக மருமகள் கோமதி கதவை திறந்தபோது வெளியில் தாழ்பாள் பூட்டியிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். பக்கத்தில் உள்ள அவரின் உறவினருக்கு தொலைபேசியில் தொடர்புகொண்டு கதவை திறந்துள்ளனர்.பின்னர் வெளியில் வந்து பார்த்தபோது தான் பணம்,நகை கொள்ளை போனது தெரிய வந்தது.
இது குறித்து சிறுகனூர் காவல்நிலையத்தில் சின்னதுரை புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளயத்த மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.