மணப்பாறை அருகே கல் குவாரி அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு
திருச்சி, ஜூன் 15 திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே துவரங்குறிச்சி அடுத்த மருதம்பட்டியில் தனியாருக்குச் சொந்தமான 10 ஏக்கர் நிலத்தில் தற்போது கல்குவாரி அமைக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் செவந்தாம்பட்டி,ஆலம்பட்டி, மருதம்பட்டி, தவசி பட்டி ,களத்தூர், பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் இப்பகுதியில் ஏற்கனவே கல் குவாரிகள் இயங்கி வருகின்றன. மேலும் தற்போது புதிதாக ஒரு கல் குவாரி உருவாக்கப்பட்டு வருகிறது. இப்பகுதியில் உள்ள குளங்கள், விவசாய நிலங்கள் , கால்நடைகள் பாதிப்புக்கு உள்ளாகும் என்றும் பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு இங்கு அமைக்கப்பட இருக்கும் கல் குவாரியை தடை செய்ய வேண்டுமென அப்பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள் திரண்டு வந்து துவரங்குறிச்சி காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளர் ரகுராமனிடம் மனு அளித்தனர். இதில் சுமார் 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு மனு அளித்தனர்.
மேலும் துவரங்குறிச்சி பகுதிக்கு நன்றி தெரிவிக்க வந்த மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் கதிரவன் மனு கொடுக்க வந்த பொது மக்களிடமும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். அப்போது கல்குவாரி அமைக்க கூடாது அதை நிறுத்த வேண்டும் என எம்எல்ஏவிடவும் கோரிக்கை விடுத்தனர்.
கல்குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் திரண்டு வந்து காவல்நிலையத்தில் மனுஅளித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.