அங்கன்வாடி சிறார்களுக்கு ரத்தசோகை கண்டறியும் முகாம்
திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த வையம்பட்டி அங்கன்வாடி மையக் குழந்தைகளுக்கான ரத்தசோகை நோய் கண்டறியும் முகாம் தொடங்கியது. வரும் நாள்களில் அங்கன்வாடி குழந்தைகளுக்கு இரும்பு சத்து அதிகரிக்கவும், ரத்த சோகை ஏற்படாமல் இருக்கவும் நாளொன்றுக்கு 50 கிராம் என இரண்டு சிகப்பு அவில் உருண்டைகளை 6மாதத்துக்கு அளிக்க அரசு திட்டமிட்டுள்ளது. அதன் முன்னோடி திட்டமாக வையம்பட்டி வட்டாரத்தில் அங்கன்வாடி குழந்தைகளுக்கு ரத்த மாதிரி எடுக்காமல் பிரத்தியோக கருவி கொண்டு நாடித்துடிப்பு ஆக்சிஜன் அளவு ஹீமோகுளோபின் அளவு ஆகியவற்றை துல்லியமாக கணக்கிடும் பணி தொடங்கியுள்ளது.
வையம்பட்டி வட்டார ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் ஷாஹிதா ரிஸ்வான் ஒன்றிணைந்து நடத்திய முகாமை வட்டார மருத்துவ அலுவலர் ஜெயலட்சுமி, வட்டார வளர்ச்சி அலுவலர் ரேவதி பாபு, அண்ணாதுரை பள்ளி சிறார் நல்வாழ்வு திட்ட மருத்துவர் ஜான்சன் துரை ஆகியோர் தொடங்கி வைத்தனர். ஸ்ரீரங்கம் கோட்டத்தில் வையம்பட்டி அந்தநல்லூர் வட்டார பகுதியில் தொடங்கப்பட்டுள்ள இத்திட்டத்தில் வையம்பட்டி, வட்டாரத்தில் 220 குழந்தைகளுக்கு ஹீமோகுளோபின் அளவு கண்டறியப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.