மோகினி அலங்காரத்தில் எழுந்தருளிய நம்பெருமாள்

0 244
Stalin trichy visit

108 வைண திருத்தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என்ற சிறப்புக்குரியதுமான ஸ்ரீர்ங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஆண்டுதோறும் வைகுண்ட ஏகாதசி திருவிழா திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்கி பகல்பத்து திருமொழி, இராப்பத்து திருவாய்மொழி என 21 நாட்கள் கொண்டாடப்படுகிறது. கடந்த 3ம் தேதி தொடங்கிய திருநெடுந்தாண்டகத்தையடுத்து, பகல்பத்து திருநாளில் நம்பெருமாள் (உற்சவர்) தினசரி ஒவ்வொரு அலங்காரத்தில் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு அர்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்துவந்தார்.

பகல்பத்தின் கடைசி நாளான இன்று நம்பெருமாள் அசுரர்களிடத்திலிருந்து தேவர்களைக்காக்க மோகினியாக உருவெடுத்தார். இதனை உணர்த்தும் வகையில் நாச்சியார் திருக்கோலம் எனப்படும் மோகினி அலங்காரத்தில் நம்பெருமாள் ரத்தினக்கிளி, தலையில் நாகாபரணம், பவளமாலை, அடுக்கு பதக்கம், ஏலக்காய் ஜடை தரித்து மூலஸ்தானத்திலிருந்து சிம்மகதியில் வெள்ளிப்பல்லக்கில் புறப்பட்டு பிரகாரங்களில் உலாவந்து, அரையர்கள் சேவை எனப்படும் பாசுரங்களைக் கேட்டருளி, பின்னர் ஆழ்வார்கள் மத்தியில் அர்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

நம்பெருமாளை ஆயிரக்கணக்கான பக்தர்கள் வரிசையில் நின்றபடி சேவித்து வருகின்றனர். முக்கிய திருநாளான வைகுண்ட ஏகாதசி எனப்படும் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நாளை அதிகாலை 4.45 மணிக்கு நடைபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை அறநிலையத் துறையினர் மற்றும் ஸ்ரீரங்கம் கோவில் நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.

Leave A Reply

Your email address will not be published.