ஸ்ரீரங்கம் கோவில் நிர்வாகத்துக்கு எதிராக செயல்படுவதாக ரெங்கராஜன் மீது போலீஸ் கமிஷனரிடம் புகார்
ஸ்ரீரங்கம் கோவில் இணைஆணையர் மாரிமுத்து திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயனிடம் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அந்த மனுவில், சென்னை நுங்கம்பாக்கம் புஷ்பாநகரை சேர்ந்தவர் ஜாகீர்உசேன். பரதநாட்டிய கலைஞரான இவர், கடந்த 10ந் தேதி ஸ்ரீரங்கம் ரெங்கநாதரை தரிசிக்க கோவிலுக்கு சென்றபோது, அவரை ஸ்ரீரங்கத்தை சோந்த ரெங்கராஜன் நரசிம்மன் கோவிலுக்குள் நுழைய விடாமல் தடுத்து, பிறப்பின் அடிப்படையிலும், மதத்தின் பெயராலும் இழிவு படுத்தியதாக புகார் கூறி இருந்தார்.
இது தொடர்பாக கோவில் பணியாளர்களிடம் விசாரித்தபோது, கோவில் பழக்க வழக்கத்தின்படி மாற்று மதத்தை சேர்ந்தவராக இருந்தாலும், சுவாமியை ஏற்று கொண்டு, சுவாமியின் மீது பற்றுதல் மற்றும் நம்பிக்கை கொண்டு இந்துமத கலாச்சார உடையணிந்து வரும் பக்தர்கள் சுவாமியை தரிசனம் செய்யலாம். ரெங்கராஜன் நரசிம்மன் பலமுறை கோவில் நிர்வாகத்துக்கு எதிராக வேண்டுமென்றே பல்வேறு இடையூறுகளை அளித்து வந்துள்ளார். இது தொடர்பாக போலீஸ் நிலையங்களில் பலமுறை புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.
இந்த மனுக்கள் மீதான விசாரணை நிலுவையில் இருந்து வருகிறது. ஆகவே இவ்வாறு தொடர்ச்சியாக கோவில் நிர்வாகத்துக்கு எதிராக செயல்பட்டு வரும் அவர் மீது இந்திய தண்டனை சட்டம் மற்றும் இதர குற்றவியல் சட்டங்களின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேலும், கடந்த 10-ந் தேதி ஜாகீர்உசேன் மீது நடந்த வன்ம செயல்கள் குறித்து சி.சி.டி.வி. கேமரா பதிவுகளும் குறுந்தகட்டில் பதிவு செய்து அனுப்பப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறியுள்ளார்.