திருச்சி மாவட்ட கலெக்டர் எஸ்.சிவராசு ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது;-
தமிழகத்தில் பிரசித்தி பெற்ற திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதசுவாமி கோவில் வைகுண்ட ஏகாதசி திருவிழாவின் முக்கிய நாளான சொர்க்கவாசல் என்னும் பரமபதவாசல் திறப்பு நாளை (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. அதையொட்டி, அன்றைய தினம் திருச்சி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை வழங்கி அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடுமுறையானது திருச்சி மாவட்டத்தில் தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிலையங்களுக்கும் பொருந்தும். எனினும் பள்ளி, கல்லூரி தேர்வுகள் நடைபெற்று வந்தால், இந்த விடுமுறை பொருந்தாது. இந்த விடுமுறை நாளில் அரசின் அனைத்து துணை கருவூலங்களும், மாவட்ட கருவூலங்களும் பாதுகாப்பாக குறைந்த பணியாளர்களைக் கொண்டு செயல்படும். இவ்விடுமுறையை ஈடுசெய்யும் பொருட்டு வருகிற 18-ந் தேதி (சனிக்கிழமை) வேலை நாளாக அறிவிக்கப்படுகிறது.
இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.