திருச்சி மாவட்டம், தொட்டியம் அருகே உள்ள திருநாராயணபுரத்தில் சிறப்பு வாய்ந்த வேதநாராயண பெருமாள் சமேத வேதநாயகித் தாயார் கோவில் உள்ளது. வைணவத் தலங்களில் ஆதிரங்கம் என்றழைக்கப்படும் இக்கோவில் தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற பெருமாள் கோவில் ஆகும்.
இங்கு பெருமாள் இந்து மதத்தின் அளப்பறிய பொக்கிங்களான ரிக், யஜூர், சாம, அதர்வன ஆகிய நான்கு வேதங்களை தலையணையாக கொண்டு பிரம்மாவிற்கு வேத உபதேசம் செய்து ஸ்ரீதேவி, பூதேவியுடன் காட்சியளிக்கிறார். இதனால், தன்னை வணங்க வரும் மாணவ-மாணவிகளுக்கு கல்வி செல்வத்தை அள்ளித்தருகிறார். மேலும் பிரகலாத ஷேத்திரம், அரயருக்கு மோட்சம் தந்த தலம் என பல சிறப்புகளை பெற்ற இக்கோவிலில் ஆண்டுதோறும் வைகுண்ட ஏகாதசி திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா ஊரடங்கு காரணமாக மிகவும் எளிமையான முறையில் நடைபெற்று வந்த இத்திருவிழா இந்த ஆண்டும் எளிமையான முறையில் நடைபெறுகிறது. கடந்த 4ம் தேதி பகல் பத்து நிகழ்ச்சியுடன் வைகுண்ட ஏகாதசி திருவிழா தொடங்கியது. தினமும் எம்பெருமான் பக்தர்களுக்கு ஒவ்வொரு அலங்காரத்தில் காட்சி அளித்து வருகிறார்.
இரவு மோகினி அலங்காரம் நடைபெற உள்ளது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சொர்க்கவாசல் திறப்பு நாளை 14ம் தேதி செவ்வாய்க்கிழமை அதிகாலை 5 மணிக்கு நடைபெற உள்ளது. திருவிழாவிற்கு சுவாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் சமூக இடைவெளியுடன் கவசம் அணிந்து சுவாமி தரிசனம் செய்ய வருமாறு கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.