தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி இன்று ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோயிலில் சொர்க்க வாசல் திறப்பு நடைபெற்றதை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு நேரில் ஆய்வு மேற்கொண்டனர். பூலோக வைகுண்டம் என்றழைக்கப்படும் ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி திருக்கோயிலில் வைகுந்த ஏகாதசி பெருவிழா இன்று காலை நடைபெற்றது.

இதையொட்டி அதிகாலை 3.30 மணிக்கு கருவறையிலிருந்து விருச்சிக லக்னத்தில் சிம்மகதியில் புறப்படும் நம்பெருமாள், நாழிகோட்டன் வாயில் வழியாக விஜாதி மண்டபத்தை அடைந்தார். அங்கு வேத விண்ணப்பம் கேட்டருளிய பின்னர் அதிகாலை 4.45 மணிக்கு பரமபதவாசல் திறப்பு நடைபெற்றது. ரங்கா – ரங்கா என்ற பக்தர்களின் முழக்கத்துடன் நம்பெருமாள் பரமபதவாசலை பிரவேசித்து திருக்கொட்டகை சென்றடைந்தார்.
இந்த நிகழ்வின்போது சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலர் டாக்டர் பி.சந்திரமோகன், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் ஜெ.குமரகுருபரன், திருக்கோயில் இணை ஆணையர் செ.மாரிமுத்து மற்றும் பலர் கலந்து கொண்டனர்.