அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்ற அழைப்பு
திருச்சி மாவட்ட கலெக்டர் எஸ்.சிவராசு ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
திருச்சி மாவட்டத்தில் பொது சுகாதாரம் மற்றும் நோய்தடுப்பு மருந்துத்துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் தற்காலிகமாக கொரோனா நோய் தடுப்பு பணிகளுக்கு முற்றிலும் ஒப்பந்த அடிப்படையில் 6 மாத காலத்திற்கு 12 மருந்தாளுனர் பணியிடங்கள் மாதம் ரூ.12,000 வீதம் ஒப்பந்த ஊதியத்தில் நிரப்பப்பட உள்ளன. எனவே அந்த பணிக்கு தமிழக அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களில் 2 ஆண்டு கால பட்டய படிப்பு முடித்திருக்க வேண்டும். மேலும், தமிழ்நாடு மருந்தாளுனர் கவுன்சிலில் முறையே பதிவு செய்து நாளது தேதி வரை புதுப்பித்திருக்க வேண்டும்.
இப்பணியிடங்கள் முற்றிலும் தற்காலிகமானது. நிரந்தர பணிநியமனம் வழங்கப்படமாட்டாது. இந்த பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் திருச்சி மாவட்ட துணை இயக்குனர் சுகாதாரப்பணிகள் அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம். வருகிற 5-ந் தேதி மாலை 5 மணிக்கு பின்னர் வரும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது. விண்ணப்பங்களை, துணை இயக்குனர், சுகாதாரப்பணிகள் அலுவலகம், ரேஸ்கோர்ஸ் ரோடு, ஜமால் முகம்மது கல்லூரி அருகில், டி.வி.எஸ்.டோல்கேட், திருச்சி- 620020 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். நேர்காணல் வருகிற 9-ந்தேதி மற்றும் 10-ந்தேதிகளில் திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் 3-ம் தளத்தில் நடைபெறும். இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.