மனநலம் பாதித்தவருக்கு கொரோனா தொற்று உறுதி : மயக்க ஊசி செலுத்தி வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டார்.
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் காந்தி நகர் 7வது குறுக்குத் தெருவைச் சேர்ந்த 42 வயதான சுந்தர். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. பெற்றோர்கள் இல்லாத நிலையில் தன் தங்கை மேனகாவுடன் வசித்து வந்துள்ளார். மனநலம் பாதிக்கப்பட்ட சுந்தர் மனச்சநல்லூர் கடைவீதி மற்றும் பல்வேறு பகுதிகளில் ஆடையின்றி நிர்வாண கோலத்தில் சுற்றித்திரிந்து வந்துள்ளார். இது அப்பகுதியில் உள்ளோரை மிகுந்த சங்கடத்தை அளித்தது. இந்நிலையில் அவரை திருச்சியில் உள்ள ஒரு காப்பகத்தில் சேர்ப்பதற்காக சில தினங்களுக்கு முன்பு மண்ணச்சநல்லூர் காவல் உதவி ஆய்வாளர் மாரிமுத்து மற்றும் காவலர்கள் மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி பெற்று காப்பக நிர்வாகிகளுக்கு தகவல் கொடுத்தனர். சுந்தரை மீட்க மணச்சநல்லூருக்கு வந்த காப்பக நிர்வாகிகள் அவருக்கு கொரோனா பரிசோதனை செய்தபோது கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் அவரை காப்பகத்தில் சேர்ப்பதற்கு நிர்வாகிகள் மறுத்து விட்டனர். இந்நிலையில் நேற்று மண்ணச்சநல்லூர். வட்டார அரசு மருத்துவ அலுவலர் மதிவாணன் மற்றும் மருத்துவதுறையினர் உள்ளிட்டோர் போலீசாருடன் இணைந்து கடைவீதியில் சுற்றித்திரிந்த சுந்தரை பிடித்து மயக்க ஊசி செலுத்தி தனிமைப்படுத்திக் கொள்ள வீட்டில் ஒப்படைத்தனர். மேலும் அவரை வீட்டில் பாதுகாப்பாக வைத்துக்கொள்ள அதிகாரிகள் அறிவுறுத்தினார்கள். இச்சம்பவம் நேற்று மண்ணச்சநல்லூர் பகுதிகளில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது.