திருச்சி மாவட்டம், சமயபுரம் அருகே உள்ள இருங்களூர் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் பிலவேந்திரம். ஓய்வு பெற்ற ஆசிரியர். இவர், நேற்று மதியம் மோட்டார் சைக்கிளில் தனது மனைவி ஜோபனாராணியை (வயது 56) அழைத்துக்கொண்டு சமயபுரம் அருகே உள்ள ஒரு தனியார் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சென்று கொண்டிருந்தார். உப்பாறு என்ற இடம் அருகே சென்றபோது பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர் ஜோபனாராணி கழுத்தில் அணிந்திருந்த தாலி செயினை பறிக்க முயற்சித்துள்ளார். இதையறிந்து சுதாரித்துக்கொண்ட அவர் செயினை இறுக்கமாக பிடித்துக் கொண்டார். இதைத்தொடர்ந்து மல்லுக்கட்டி போராடிய நிலையில் மர்ம நபர் அங்கிருந்து தப்பி
ஓடி விட்டார். இந்நிலையில் அந்த நபர் செயினை பறிக்க முயற்சித்த போது மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்ததில் ஜோபனாராணிக்கு காயம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து காயமடைந்த தனது மனைவியை பிலவேந்திரம் சமயபுரம் அருகே உள்ள தனியார் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தார். பின்னர், இதுகுறித்து சமயபுரம் போலீஸ் நிலையத்திற்கு அவர் கொடுத்த தகவலின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரகாஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை செய்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து செயினை பறிக்க முயற்சி செய்த மர்ம நபரை தேடி வருகின்றனர்.