நன்னடத்தை உறுதிமொழியை மீறிய ரவுடிக்கு 332 நாள்கள் சிறை தண்டனை
திருச்சி மாநகரம் பாலக்கரை காவல்நிலைய எல்லைக்குட்பட்ட சரித்திரப்பதிவேடு ரவுடி கிருபாகரன் ( 21) என்பவர் திருச்சி மாநகரம் மற்றும் மாவட்டத்தில் பல்வேறு குற்ற வழக்குகளில் ஈடுபட்டுள்ளதால், மேற்படி ரவுடி தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபடுவதை தடுப்பதற்காக, பாலக்கரை காவல்நிலைய ஆய்வாளரின் பிணையப்பட்ட அறிக்கையின்படி ரவுடியை நிர்வாக செயல்துறை நடுவர் நீதிமன்றம் முன்பு ஆஜர் செய்ததின் பேரில், ஒரு வருட காலத்திற்கு பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கமாட்டேன், குற்றச்செயல்களில் ஈடுபடமாட்டேன் என்ற நன்னடத்தை உறுதிமொழி பிரமாண பத்திரத்தை மேற்படி ரவுடி கிருபாகரன் தாக்கல் செய்துள்ளார்.
மேற்படி கிருபாகரன் நன்னடத்தை பிரமாண பத்திரம் தாக்கல் செய்த பின்பு, நன்னடத்தை பிரமாண பத்திரத்தை மீறி கத்தியை காட்டி மிரட்டி பொதுமக்களிடம் பணம் வழிப்பறி செய்தல் மற்றும் பொது சொத்திற்கு பங்கம் விளைவித்தல் போன்ற செயல்களில் ஈடுபட்டதால் ரவுடி மீது பாலக்கரை காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, நிர்வாக செயல்துறை நடுவர் நீதிமன்றம் முன்பு ஆஜர்படுத்தப்பட்டும் விசாரணை செய்தும், மேற்படி ரவுடி கிருபாகரன் தாக்கல் செய்த நன்னடத்தை பிரமாண பத்திரத்தில் குற்றசெயல்கள் புரியாமல் நன்னடத்தையில் இருந்த காலத்தை தவிர மீதியுள்ள 332 நாட்களை சிறையில் கழிக்க நிர்வாக செயல்துறை நடுவர் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, மேற்படி கிருபாகரன் உடனடியாக திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
மேலும் திருச்சி மாநகரில் இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என திருச்சி மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.