திருச்சி மாவட்டம், மணப்பாறை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருசக்கர வாகனங்களில் அதிக அளவில் மாயமாகி வந்தது. இதனால் இருசக்கர வாகனங்களை திருடிச் செல்லும் கொள்ளையர்களை பிடிக்க போலீசார் தீவிரமாக கண்காணித்து வந்தனர். அதன்படி மணப்பாறை போலீஸ் துணை சூப்பிரண்ட் பிருந்தா தலைமையில் பல்வேறு பகுதிகளில் அவ்வபோது வாகன தணிக்கையும் நடைபெற்று வந்தது. அதன்படி நடைபெற்ற வாகன தணிக்கையில் வாலிபர் ஒருவரை நிறுத்தி சோதனை செய்தபோது அவர் முன்னுக்குப் பின் முரணாக தகவல் அளித்தார்.
இதையடுத்து அவரை போலீசார் அழைத்துச் சென்று விசாரணை நடத்திய போது மணப்பாறை மற்றும் திருச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருசக்கர வாகனங்களை திருடியதும், அவர் ஊத்துக்குளி வடக்குத் தெருவைச் சேர்ந்த கார்த்திகேயன்(23) என்பதும் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து அவர் மீது மணப்பாறை போலீசார் வழக்குப்பதிவு செய்து 17 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர். திருடிய அனைத்து வாகனங்களும் எக்ஸ்.எல். மற்றும் டிவிஎஸ்50 தான் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திகேயன் இருசக்கர வாகனங்களை திருடுவதற்கான யுக்தி தான் அனைவரையும் அதிர வைத்தது. எந்த இடத்தில் இருசக்கர வாகனத்தை திருடச் சென்றாலும் அந்த இடத்திலேயே உடனடியாக ஒரு சாவியை தயார் செய்து அந்த சாவியை போட்டு தான் வண்டியை எடுத்துச் செல்வதாக போலீசாரிடம் தெரிவித்ததுடன் அதை செய்தும் காட்டினார்.