திருச்சி கண்டோன்மெண்ட் பகுதியைச் சேர்ந்தவர்கள் டாக்டர் தம்பதி. தனியார் ஆஸ்பத்திரியில் டாக்டர்களாக பணியாற்றி வருகிறார்கள். இத்தம்பதிக்கு 13 வயதில் ஒரு மகள் இருக்கிறார். இந்த நிலையில் தந்தையான டாக்டர் தனது மகளுடன் நீண்ட நேரம் செலவிட்டு வந்துள்ளார். மனைவி வீட்டில் இல்லாத நேரத்தில் மகளுக்கு பாலியல் ரீதியான தொல்லை கொடுத்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இதை அறிந்த டாக்டரின் மனைவி தனது மகளை அழைத்துக்கொண்டு செங்கல்பட்டில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார்.
இந்த தகவல் அறிந்ததும் சைல்டு லைன் அமைப்பினர் பாதிக்கப்பட்ட குழந்தையின் தாயாரான டாக்டரிடம் உண்மை நிலவரத்தை கேட்டறிந்ததாக கூறப்படுகிறது. அதன் பின்னர் சைல்டு லைன் அமைப்பினரின் அறிவுறுத்தலின் பேரில் திருச்சி கண்டோன்மெண்ட் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் பெண் டாக்டர் புகார் கொடுத்தார். இதுதொடர்பாக அனைத்து மகளிர் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது 13 வயது மகளிடம், அவரது தந்தையான டாக்டர் பாலியல் ரீதியாக துன்புறுத்தலில் ஈடுபட்டது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து அந்த டாக்டரை மகளிர் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.