திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே திருவாசியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ பாலாம்பிகா சமேத மாற்றுரைவரதீஸ்வரர் திருக்கோவிலில் 33 ஆண்டுகளுக்கு பிறகு புதிய திருத்தேர் அமைக்கப்பட்டு வைகாசி தேரோட்ட விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
மண்ணச்சநல்லூர் அருகே திருவாசி கிராமத்தில் முயலக நோயை ( வயிற்று வலி ) அகற்றி அருள்பாலிக்கும் பிரசித்திபெற்ற ஸ்ரீ பாலாம்பிகா சமேத மாற்றுரைவரதீஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி விசாகத்தை முன்னிட்டு தேரோட்ட விழா நடைபெறுவது வழக்கம்.
இக்கோவிலின் திருத்தேர் பழுதடைந்த காரணத்தினால் கடந்த 33 ஆண்டுகளாக தேரோட்டம் நடைபெறாமல் இருந்து வந்தது. இந்நிலையில் புதிய தேர் கட்டும் பணி முடிவடைந்து கடந்த ஏப்ரல் மாதம் 25 ந்தேதி தேர் வெள்ளோட்டம் நடைப்பெற்றது.
இந்நிலையில் வைகாசி தேர்திருவிழா கடந்த 1ஆம் தேதி தொடங்கியது. தேரோட்டத்தை முன்னிட்டு கடந்த 3ஆம் தேதி கொடியேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது.திருவிழாக்காலங்களில் சுவாமி தினமும் இரவில் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார். முக்கிய நிகழ்வான வைகாசி தேரோட்ட விழா இன்று நடைபெற்றது.
பல ஆண்டுகளுக்கு பின்பு நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு மிகுந்த உற்சாகத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமானோர் தேர் திருவிழாவிற்கு வந்து சாமி தரிசனம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் கோவில் பணியாளர்கள் ஊர் பொதுமக்கள் கோயில் குருக்கள் செய்திருந்தனர்.
