நம்பர் 1 டோல்கேட் கொள்ளிடம் ஆறு புதுபாலம் அடியில் நேற்று வாலிபர் சடலமாக மீட்பு
திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே நம்பர் 1 டோல்கேட் கொள்ளிடம் ஆற்றின் பாலத்தின் கீழ் வாலிபரை சடலமாக போலீசார் மீட்டனர்.
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை சாவவிடுதி மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் ஜெயராமன்,கோமதி தம்பதியினர்.இவர்களுடைய மகன் 35 வயதான வெற்றிச்செல்வன்.இவருடைய தந்தை இறந்து விட்டார். இவர் சற்று மனநிலை பாதித்தவர் என கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த 6 மாதத்துக்கு முன்பு டோல்கேட்டில் உள்ள தனியார் மருந்துக்கடையில் அங்கேயே தங்கி வேலை செய்து வந்துள்ளார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன் தாயிடம் செல்போனில் ஏதோ மன அழுத்தத்துடன் பேசியுள்ளார். பின்னர் அவரை தாய் சமதான படுத்தியுள்ளார்.மேலும் கடந்த 10 நாட்களாக இவர் சரியாக உணவு ஏதும் சாப்பிடவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் கொள்ளிடம் ஆற்றில் இவர் சடலமாக கிடப்பதாக கொள்ளிடம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற கொள்ளிடம் போலீசார் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்க்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் இவர் உணவு சாப்பிடாமல் இருந்தால் உயிரிழந்தாரா, அல்லது மன அழுத்தத்தால் விஷம் ஏதும் சாப்பிட்டாரா என பல்வேறு கோணங்களில் விசாரணை செய்து வருகின்றனர்.