குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
திருச்சி மாவட்டம் ஜீயபுரம் உட்கோட்டம் மண்ணச்சநல்லூர் காவல் நிலையத்தில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தடுப்பு தினம் விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் விளையாட்டுப் போட்டிகள் 19.11.2022 நடத்தப்பட்டது. மண்ணச்சநல்லூர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் ரமேஷ் குமார் தலைமை தாங்கி குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தடுப்பு தினம் குறித்து நோக்கயுரையாற்றி விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார்.
மாவட்ட குழந்தைகள் நலக்குழு உறுப்பினர் முனைவர் பிரபு நவம்பர் 19 சர்வதேச குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தடுப்பு தினத்தை முன்னிட்டு குழந்தைகள் மீதான வன்முறைகளை தடுப்பதில் மாணவர்களின் பங்கு குறித்தும் குழந்தை நலம் சார்ந்த சட்டங்கள் குழந்தை திருமண தடுப்புச் சட்டம், பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம், குழந்தைகளுக்கான இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டம், குழந்தை தொழிலாளர் ஒழிப்பு சட்டம் மற்றும் இளைஞர் நீதி சட்டம் குறித்தும் குழந்தைகளுக்கான இலவச தொலைபேசி எண் 1098, காவல் உதவி செயலி செயல்பாடுகள் குறித்து விழிப்புணர்வு வழங்கினார்.

வினாடி வினா, வட்டம் சுற்றுதல், கட்டுரைப்போட்டி முதலிய விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டது. காவல் நிலையத்தை மாணவர்கள் பார்வையிட்டு நிலைய செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தனர்.
காவல் உதவி ஆய்வாளர் பார்வதி நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்து விளையாட்டுப் போட்டிகளை நடத்தினார். இந்நிகழ்ச்சியில் மண்ணச்சநல்லூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள், ஆசிரியர்கள், காவலர்கள் கலந்து கொண்டனர்.