‘டெஸ்ட் பர்ச்சேஸ்’ முறையினை திரும்ப பெற கோரி மனு அளிக்கும் போராட்டம்
திருச்சி, நவ.28 தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில பொதுச் செயலாளர் கோவிந்தராஜூலு வெளியிட்டுள்ள அறிக்கையில், வணிகவரித்துறை அதிகாரிகள் அண்மைக்காலமாக ‘டெஸ்ட் பர்ச்சேஸ்’ என்ற முறையினை அமல்படுத்தி வருகின்றனர். இத்திட்டத்தின்படி முறையாக வரி செலுத்தப்படவில்லை என குற்றம் சாட்டி தமிழகம் முழுவதும் வணிகர்களிடம் பெரும் தொகையை அபராதமாக வசூலித்து வருகின்றனர். இத்திட்டம் அதிகாரிகளின் லஞ்சம் ஊழலுக்கு வழிவகுக்கும் திட்டமாகும். எனவே தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு இத்திட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி முதற்கட்டமாக தமிழகம் முழுவதும் மாவட்ட அளவிலான வணிகவரி உயர் அதிகாரியிடம் மனு அளிப்பது என்று முடிவு செய்யப்பட்டது.
அதனடிப்படையில் நாளை (நவ.29) காலை 11:00 மணி அளவில் திருச்சி நீதிமன்ற வளாகத்தில், பத்திரப்பதிவு அலுவலகம் பின்புறம் அமைந்துள்ள வணிகவரி அலுவலகத்தில் திருச்சி கோட்ட வணிகவரி இணை ஆணையரை எனது (தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில பொதுச்செயலாளர் கோவிந்தராஜுலு) தலைமையில் சந்தித்து கோரிக்கை மனு அளிக்கப்பட இருக்கிறது, இந்நிகழ்வில் பேரமைப்பின் திருச்சி மண்டல தலைவர், மாவட்ட தலைவர் திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த, மாநில துணைத்தலைவர்கள், மாநில இணைச் செயலாளர்கள், திருச்சி மாவட்ட நிர்வாகிகள், இளைஞர் அணி நிர்வாகிகள், கிளைச் சங்க நிர்வாகிகள் பெருந்திரளாக கலந்து கொள்ள உள்ளனர். அதைத்தொடர்து பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடைபெறும் என தெரிவித்துள்ளார்.