கார் உதிரி பாகங்கள் உடைத்து பிரித்தெடுக்கும் கடையில் தீ விபத்து
திருச்சி மாநகராட்சி பகுதிக்கு உட்பட்ட பழைய பால் பண்ணை அருகே ஜாஃபர் என்பவர் நடத்தி வரும் பழைய காரை உடைத்தெடுத்து அதன் உதிரி பாகங்களை விற்பனை செய்யும் பட்டறையானது செயல்பட்டு வருகிறது.
வழக்கம்போல் பணியாளர்கள் காரை உடைத்து உதிரி பாகங்களை பிரித்தெடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அருகில் வெல்டிங் பற்றவைத்து கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக தீ விபத்து ஏற்பட்டதால் அங்கு வைக்கப்பட்டிருந்த கார் மற்றும் கார் உதிரி பாகங்கள் கொழுந்து விட்டு எரிய துவங்கி அந்த பகுதியே புகை மூட்டமாக காணப்பட்டது.
இதனையடுத்து அங்கிருந்த பணியாளர்கள் தீயணைப்புத் துறைக்கு தகவல் அளித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் விரைந்து செயல்பட்டு தீயை அணைத்தனர்.
சுமார் 2 லட்சம் மதிப்புள்ள கார் மற்றும் உதவி பாகங்கள் முற்றிலுமாக எரிந்து சேதம் அடைந்தது.
இந்த தீ விபத்து குறித்து காந்தி மார்க்கெட் காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.