திருச்சியில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 206 ஆக உயர்வு
திருச்சி, ஏப். 17 தமிழ்நாட்டில் சென்னை, கோவை, சேலத்துக்கு அடுத்தபடியாக திருச்சி மாவட்டத்தில் கரோனா தொற்று அதிகரித்து வருகிறது. திருச்சி மாவட்டத்தில் கடந்த மார்ச் மாதம் 1- ஆம் தேதி ஒருவருக்கு மட்டுமே கரோனா தொற்று இருந்தது.
நேற்று முன்தினம் வரை கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 191 ஆக இருந்தது. இதில் 97 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பிவிட்டனர். மேலும் ஒருவர் கரோனாவுக்கு பலியாகி இருந்தார். இதையடுத்து 93 பேர் மட்டும் தனிமையில் மருத்துவமனையிலும், வீடுகளிலும் சிகிச்சை பெற்று வந்தனர்.
இந்தநிலையில் நேற்று 15 பேருக்கு புதிதாக கரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதன் மூலம் கடந்த 45 நாட்களில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 206 ஆக உயர்ந்துள்ளது. அதே நேரம் நேற்று 14 பேர் பூரண குணமடைந்தனர். இதன்மூலம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 111 ஆகும். நேற்று கரோனாவுக்கு உயிரிழப்பு எதுவும் இல்லை. இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை ஒன்றாகவே உள்ளது. தற்போது கரோனாவால் பாதிக்கப்பட்ட 94 பேரில் பலர் தங்கள் வீடுகளிலும், சிலர் அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளிலும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.