குணசீலத்தில் பக்தரின் கார் கண்ணாடியை உடைத்து பேக் திருட்டு: மீட்ட காவல்துறையினர்
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே குணசீலத்தில் உள்ள ஸ்ரீ பிரசன்னா வெங்கடேச பெருமாள் கோயிலில் தரிசனம் செய்ய வந்த கர்நாடகா மாநில பக்தரின் கார் கண்ணாடியை உடைத்து பேக்கை திருடி சென்ற மர்ம நபர். போலீசார் மீட்டு பக்தரிடம் ஒப்படைத்தனர்.
கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த சுரேஷ் குமார் தம்பதியினர் குணசீலத்தில் உள்ள ஸ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலுக்கு தரிசனம் செய்வதற்காக இன்று காலை 8 மணி அளவில் வந்துள்ளனர். அப்பொழுது கோயில் வளாகத்தில் காரை நிறுத்திவிட்டு குளிக்க சென்றுள்ளனர். இந்நிலையில் அங்கு வந்த மர்ம நபர் காரின் கண்ணாடி உடைத்து காரில் இருந்த பேக்கை திருடி சென்றுள்ளார். அந்த பேக்கில் நான்கு செல்போன், நகை, பணம் இருந்துள்ளது. குளிக்கச் சென்ற தம்பதியினர் திரும்பி வந்து பார்த்தபோது கார் கண்ணாடி உடைத்திருப்பதையும், அதிலிருந்த பேக் மாயமானதை கண்டும் அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து அக்கம் பக்கத்தினரிடம் கூறிய போது அவர்கள் வாத்தலை காவல் நிலைய தனிப்பிரிவு காவலர் கார்த்திக்கு தகவல் கொடுத்துள்ளனர். தனிப்பிரிவு காவலர் கார்த்திக் வாத்தலை காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்ததன் பேரில் வாத்தலை காவல் உதவி ஆய்வாளர் பெரியமணி, தலைமை காவலர் கமலகன்னன், காவலர் கார்த்தி,வெங்கடெஷ் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை செய்தனர்.மேலும் GPRS உதவியுடன் செல்போனை சிக்னலை வைத்து தேடிய போது குணசீலத்திலிருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் கிடந்த பேக்கை கண்டுபிடித்தனர். பேக்கை திருடி சென்ற மர்ம நபர் அந்தப் பகுதியில் வீசிச் சென்று உள்ளார்.பின்னர் பேக்கிலிருந்த செல்போன்,பணம், நகைகளை கர்நாடக பக்தரிடம் வாத்தலை காவல் நிலைய உதவி ஆய்வாளர் பெரிய மணி தலைமையில் போலீசார் ஒப்படைத்தனர். துரிதமாக செயல்பட்டு பேக்கை மீட்டுக் கொடுத்த வாத்தலை போலீசாரை கர்நாடக பக்தரும் கிராம மக்களும் பாராட்டி வாழ்துக்களை தெரிவித்தனர்.