திமுகவின் சார்பில் 2024 நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்வதற்கான செயல்வீரர்கள் கூட்டம்
திருச்சி மாவட்டம், வையம்பட்டி தெற்கு ஒன்றிய திமுக வின் சார்பில் 2024 நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்வதற்கான ஆயத்த செயல்வீரர்கள் கூட்டம் வையம்பட்டி தனியார் திருமண மஹாலில் ஒன்றியச் செயலாளர் ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது. இதில் தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கலந்து கொண்டு பேசியபோது.
எதிர்க்கட்சியினர் நம்மை விமர்சனம் செய்யலாம், இல்லாததையும் பொல்லாததையும் சொல்லிக் கூட விமர்சனம் செய்வார்கள். எதிர்க்கட்சியினர் என்பவர் அப்படித்தான் இருப்பார்கள். ஒன்றிய அரசாக இருக்கக்கூடிய பாரதிய ஜனதா நம்மை எதற்காக விமர்சனர் செய்கிறார்கள் என்றால் எங்கே திராவிட இனம் வளர்ந்து விடுமோ என்ற அச்சத்தில் தான் இல்லாததையும் பொல்லாததையும் சொல்கின்றார்கள். ஆனால் ஒரு நாட்டின் ஆளுநர் எதிர்க்கட்சித் தலைவர் போல் செயல்படுகிறார். முதல்வர் கொண்டு வருகின்ற திட்டமாக இருந்தாலும் சரி, சட்டமன்ற உறுப்பினர்கள் கொண்டு வந்த தீர்மானமாக இருந்தாலும் சரி அதையெல்லாம் நிறைவேற்றுவது தான் ஆளுநரின் வேலை. ஆனால் அவர் என்ன செய்கிறார் என்றால் எதிர்க்கட்சித் தலைவர் மாதிரி செயல்பட்டுக் கொண்டிருக்கின்றார். இதற்கு காரணம் அவரை நியமனம் செய்திருக்கின்ற ஒன்றிய அரசு என்ன சொல்கிறதோ அதை செய்கின்ற ஒரு பொம்மலாட்டம் போல் இங்கே நடந்து கொண்டிருக்கின்றார். இது போன்ற வேதனை தரக்கூடிய நிகழ்வாக தான் தமிழகத்தில் நடந்து கொண்டிருக்கின்றது. அவர்களுக்கு பாடம் புகட்ட வேண்டும் என்று சொன்னால் அடுத்து வரவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் தமிழக முதல்வர் சொல்வது போல் நாடும் நமதே நாற்பதும் நமதே என்று சொல்லும் வகையில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். அவ்வாறு செயல்படும் போது தான் முதல்வர் சொல்லுகின்ற அந்த வேதவாக்கான நாடும் நமதே நாற்பதும் நமதே என்ற இலக்கை எட்ட முடியும் என்பதை நாம் முழுமையாக நம்புகின்றோம் என்றார்.
இந்நிகழ்வில் திருச்சி வடக்கு மாவட்டக் கழக செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான காடுவெட்டி தியாகராஜன் சிறப்புரையாற்றினார். இந்நிகழ்வில் மாவட்ட கழக நிர்வாகிகள் கோவிந்தராஜ், சபியுல்லா, கவிஞர் சல்மா, டால்பின் சாலமன், ஒன்றிய குழு தலைவர் குணசீலன் ஒன்றிய கழக நிர்வாகிகள் மாவட்டக் கழக நிர்வாகிகள் ஒன்றிய கிளைக் கழக நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.