திருச்சி சிறையில் இருந்து தப்பிய பல்கேரிய நாட்டு கைதி தேடப்படும் குற்றவாளியாக அறிவிப்பு!
திருச்சி முகாம் சிறையில் இருந்து தப்பிய பல்கேரிய நாட்டு கைதி தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
திருச்சி மத்திய சிறைச்சாலையில் முகாம் சிறை உள்ளது. இங்கு போலி பாஸ்போர்ட், விசா காலம் முடிந்து வசித்து வருபவர்கள் போன்ற பல்வேறு குற்ற வழக்குகளில் கைதான இலங்கை உள்ளிட்ட வெளிநாட்டு கைதிகள் தண்டனை காலம் முடியும் வரை அடைத்து வைக்கப்பட்டு வருகின்றார்கள். அதன் அடிப்படையில் கடந்த 2019ஆம் ஆண்டு ஆன்லைன் மோசடி வழக்கில் பல்கேரிய நாட்டைச் சேர்ந்த இலியான் அட்ரகவ் மார்கோவ் என்பவரை சென்னை பெருநகர குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து திருச்சி முகாம் சிறையில் அடைத்தனர்.

இந்த நிலையில் திருச்சி முகாம் சிறையில் இருந்த இலியான் அட்ரகவ் மார்கோவ் கடந்த 31ஆம் தேதி சிறையிலிருந்து தப்பினார். ஜன்னல் கம்பியை அறுத்து சிறைக்கு தண்ணீர் கொண்டு வந்த லாரியின் பதுங்கிய அவர் தப்பிச் சென்று இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
இதுகுறித்து திருச்சி கொட்டப்பட்டு இலங்கை அகதிகள் முகாம் மண்டல தனி தாசில்தார் ஜமுனாராணி அளித்த புகாரின் பேரில் கே.கே நகர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு கேரளா, கர்நாடகா மாநிலங்களில் தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.

இதுவரை அவரைப் பற்றி எந்த தகவலும் இல்லை. இந்த நிலையில் சென்னை பெருநகர குற்றப்பிரிவு போலீசார் இலியான் அட்ரகவ் மார்கோவ்க்கு எதிராக நோட்டிஸ் வெளியிட்டுள்ளனர். அவர் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு உள்ளார். இதன் மூலம் அவர் வெளிநாடு தப்பிச் செல்வதை தடுக்க முடியும், இந்தியாவின் அனைத்து விமான நிலையங்களிலும் கைதியின் பெயர், போட்டோ, பாஸ்போர்ட் விவரம் அளிக்கப்பட்டுள்ளது.