பள்ளிகளுக்கிடையிலான நுண்கலைப் போட்டி…
கலைக் காவிரி நுண்கலைக் கல்லூரியில் பள்ளிகளுக்கிடையிலான நுண்கலைப் போட்டி “தளிர் வசந்தம் – 23” கலைவிழா 11ஆம் ஆண்டாக நடைபெற்றது. இந்நிகழ்வில் கல்லூரியின் செயலர் அருள்பணி லூயிஸ் பிரிட்டோ தலைமையேற்று ஆசியுரை வழங்கினார். கல்லூரியின் முதல்வர் ப.நடராஜன் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக திருச்சி மாநகராட்சியின் 56 ஆவது மாமன்ற உறுப்பினர் கலைச்செல்வி பங்கேற்று குத்து விளக்கேற்றி தொடக்கி வைத்தார். 30-கும் மேற்பட்ட பள்ளிகள் 10 வகையான செவ்வியல் போட்டிகளில் பங்கேற்றனர்.
மாலை நடைபெற்ற பரிசளிப்பு விழா நிகழ்வில் சிறப்பு விருந்தினராக ஜோ. ஜோ. லாரன்ஸ் பங்கேற்று சிறப்புரையாற்றி வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.

அனைத்து போட்டிகளிலும் பங்கேற்று அதிகப் புள்ளிகள் பெற்று ஆல்ஃபா விஸ்டம் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் முதலிடம் பெற்று சுழற்கேடயத்தை வென்றனர். அதனைத் தொடர்ந்து புனித சிலுவை பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் இரண்டாமிடம் பெற்றனர்.
நிகழ்வை இல. கோவிந்தன், ரோஸ்லின் மேரி, உமா மகேஸ்வரி, ஆக்னஸ் சர்மினி, ராஜேஷ் பாபு, பிரகாஷ் ஆகியோர் ஒருங்கிணைத்தனர். நிறைவாக நூலகர் ரோஸ்லின் மேரி நன்றி கூறினார். நிகழ்வை நடனத்துறை முனைவர் புவனேஸ்வரி, தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர் கி.சதீஷ் குமார் தொகுத்து வழங்கினர்.