கர்நாடக அரசை கண்டித்து விவசாயிகள் ரயில் மறியல் முயற்சி
திருச்சி, அக்.12 திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே பிச்சாண்டார் கோயில் ஊராட்சியில் உள்ள உத்தமர்கோயில் ரயில் நிலையத்தில் தமிழ்நாட்டிற்கு தரவேண்டிய காவிரி நீரை திறந்து விட மறுக்கும் கர்நாடக அரசை கண்டித்து ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்ற விவசாயிகளை காவல்துறையினர் கைது செய்தனர்.
தமிழ்நாட்டிற்கு தரவேண்டிய காவிரி நீரை திறந்து விட மறுக்கும் கர்நாடக அரசை கண்டித்து தமிழ்நாடு டெல்டா பகுதிகளில் பல்வேறு அரசியல் கட்சியினர் பல்வேறு விவசாய அமைப்புகள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் இன்று பிச்சாண்டார் கோயில் ஊராட்சியில் உள்ள உத்தமர் கோவில் ரயில் நிலையம் அருகே தமிழ்நாடு ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்கம் சார்பில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். இதில் தமிழ்நாட்டிற்கு குறுவைக்கும் சம்பா சாகுபடிக்கும் உச்சநீதிமன்ற உத்தரவின் படி காவிரி நீரை திறந்து விட மறுக்கும் கர்நாடக அரசை கண்டித்தும், கர்நாடகாவிடம் இருந்து காவிரி நீரை பெற்றுத் தர வலியுறுத்தாத ஒன்றிய பா.ஜ.க அரசை கண்டித்தும் கர்நாடகா மேகதாதுவில் காவிரியின் குறுக்கே அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர். உத்தமர் கோவில் ரயில் நிலையம் அருகே தமிழ்நாடு ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்கம் மாநிலத் தலைவர் விஸ்வநாதன் தலைமையில் 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் கடலூரில் இருந்து திருச்சி நோக்கி செல்லும் பயணிகள் ரயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். இதனைத் தொடர்ந்து லால்குடி டிஎஸ்பி அஜய் தங்கம் தலைமையில் 50க்கும் மேற்பட்ட காவல்துறையினர் மற்றும் ரயில்வே காவல்துஐறயினர் ரயில் மறியல் போராட்டத்தில் விவசாயிகளை ஈடுபட விடாமல் மூன்று பெண்கள் உட்பட 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் அனைவரும் கைது செய்யப்பட்டு அப்பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் அடைத்தனர்.