சமயபுரம் மாரியம்மன் கோயிலில் நவராத்திரி 5 ம் நாள் விழா
சமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலில் நவராத்திரி திருவிழாவின் 5 ம் நாள் அம்மன் வெண்ணைத்தாழி கிருஷ்ணர் அலங்காரத்தில் திருவீதி உலா நடைபெற்றது.
திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோவிலில் 10 நாட்கள் நடைபெறும் நவராத்திரி திருவிழா கடந்த 15 ந்தேதி தொடங்கியது. 5 ம் நாளில் அம்மன் வெண்ணைத்தாழி கிருஷ்ணர் அலங்காரத்தில் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
அம்மன் ஸ்தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்றதும் முதன்மையானதும் சமயபுரம் மாரியம்மன் கோயிலாகும். இக்கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் நவராத்திரி திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.
இந்தாண்டுக்கான நவராத்திரி திருவிழா கடந்த 15 ந்தேதி தொடங்கியது. இதில் புரட்டாசி மாதம் அமாவாசை மற்றும் மறுதினம் பிரதமை முதல் நவமி வரை தேவி பாகவதம், அக்கினி பாகவதம், அக்கினி புராணம், தேவி மகாமித்யம் ஆகிய புராணக் கூற்றுகளின் படி அதர்மமான மகிஷாசுரனை அழிக்க ஊசிமுனையில் துர்க்கை, மகாலட்சுமி, சரஸ்வதி என முறையே முதல், நடு,கடை என 9 நாட்கள் கடும் தவம் புரிந்து 10 வது நாள் விஜயதசமி அன்று வெற்றி பெற்ற திருநாளை நவராத்திரி பெரு விழாவாக கொண்டாடுவது சமயபுரம் மாரியம்மன் கோவிலின் தனி சிறப்பாகும்.
நவராத்திரி நாட்களில் அம்மனை வழிபடுவது மூலம் பக்தர்களுக்கு வறுமை ஒழியும், தனதானிய பலம் கிடைக்கும், பகை ஒழித்து கல்வி வளர்ச்சி பெற்று துன்பம் நீங்கும், செல்வ வளர்ச்சி, சேம விருத்தி, பயம் நீங்குதல், சர்வ மங்களம் அடைதல், சகலதோஷ நிவர்த்தி, சகல காரிய அனுகூலம் உள்ளிட்ட பலன்கள் கிடைக்க பெறும் என்பது ஐதீகம்.
நவராத்திரி திருவிழா கடந்த 15 ந்தேதி தொடங்கி வருகின்ற 24 ம் தேதி வரை நவராத்திரி உற்சவமும், சரஸ்வதி பூஜை மற்றும் விஜயதசமி நாளில் அம்பாள் வெள்ளிக் குதிரை வாகனத்தில் புறப்பாடாகி வன்னி மரம் அடைந்து அம்பு போடும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. நவராத்திரி உற்சவத்தில் தினமும் மாலை 4.30 சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாதாரனை நடைபெற்று மாலை 6 மணிக்கு அம்பாள் புறப்பாடாகி கோவில் மேற்கு பிரகார நவராத்திரி மண்டபத்தில் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பார். தினசரி இரவு 8 மணிக்கு சிறப்பு தீபாதாராணையும்,6 மணி முதல் 9 மணி வரை கலைநிகழ்ச்சிகளும் நடைபெறுகிறது.இந்நிலையில் நவராத்திரி விழாவின் 5 ம் நாளில் அம்மன் வெண்ணைத்தாழி கிருஷ்ணர் அலங்காரத்தில் எழுந்தருளி கோயில் உள் பிரகாரகத்தில் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதில் திரளான பகத்தரகள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.
இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையர் கல்யாணி தலைமையில் கோயில் பணியாளர்கள்,
கோயில் குருக்கள்கள் செய்து வருகின்றனர்.