எம்.ஆர்.பாளையம் யானைகள் மறுவாழ்வு மையத்தில் 6 யானைகளுக்கு கொரோனா பரிசோதனை..
Elephant camp
திருச்சி மாவட்டம், சிறுகனூர் அருகே எம்.ஆர்.பாளையம் ஊராட்சியில் உள்ள யானைகள் மறுவாழ்வு மையத்தில் உள்ள 6 யானைகளுக்கு திருச்சி மாவட்ட வன அலுவலர் சுஜாதா தலைமையில் கோயம்புத்தூர் வன கால்நடை மருத்துவ அலுவலர் டாக்டர் சுகுமார் குழுவினர் கொரோனா பரிசோதனை செய்தனர்

தமிழக அரசின் அனுமதியின்றி தனியார் வசம் வளர்க்கப்பட்ட காஞ்சிபுரம் பகுதியைச் சேர்ந்த சந்தியா, இந்து, ஜெயந்தி மற்றும் மதுரையைச் சேர்ந்த மல்லாச்சி, திருநெல்வேலி பகுதியை சேர்ந்த ஜமிலா, திருவிடைமருதூர் பகுதியைச் சேர்ந்த கோமதி ஆகிய 6 யானைகளும் நீதிமன்ற உத்தரவின் பேரில் எம்.ஆர்.பாளையம் யானைகள் மறுவாழ்வு மையத்தில் வைத்து பராமரிக்கப்பட்டு வருகிறது.வண்டலூர் வன உயிரியல் பூங்காவில் உள்ள சிங்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதனைத் தொடர்ந்து திருச்சி மண்ணச்சநல்லூர் அருகே உள்ள எம்.ஆர். பாளையம் யானைகள் மறுவாழ்வு மையத்தில் உள்ள 6 யானைகளுக்கும் தும்பிக்கையில் திரவ நீர் ஊற்றியும், யானை ஆசன வாயில் ஸ்வாப் பரிசோதனைகளையும் கோயம்புத்தூர் வன கால்நடை மருத்துவ அலுவலர் டாக்டர் சுகுமார் பரிசோதனை செய்தார். இந்த பரிசோதனையின் போது திருச்சி மாவட்ட வன அலுவலர் சுஜாதா, உதவி வன பாதுகாவலர் சம்பத்குமார் மற்றும் வன சரகர்கள், யானை பாகன்கள் உடனிருந்தனர்.
நாய், பூனை, சிங்கம் போன்ற மாமிச உண்ணிகளுக்கு கொரோனா பாதிப்பு ஏற்படும். ஆனால் யானைகளுக்கு கொரோனா தொற்று ஏற்படுவதற்கு மிகவும் அரிது . தற்போது எடுத்த கொரோனா மாதிரிகளை பரிசோதனைக்காக உத்தரபிரதேச மாநிலம் பரேலியில் உள்ள வன ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்க இருக்கிறோம் எனவும் மாதிரி கிடைத்தவுடன் ஓரிரு நாட்களில் முடிவு தெரிய வரும் என வன கால்நடை மருத்துவர் சுகுமார் செய்தியாளர்களிடம் கூறினார்..