காவல்நிலையம் முன்பு 3 பேர் தற்கொலை முயற்சி!
திருச்சி, டிச. 2 திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் காவல்நிலையம் முன்பு இடப் பிரச்சினையில் பெட்ரோல் ஊற்றி தற்கொலைக்கு முயன்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
மண்ணச்சநல்லூர் அருகே பாச்சூர் தென்றல் நகரைச் சேர்ந்தவர் 55 வயதான விவசாயி செல்வராஜ் (55) . இவரது மகன்கள் அஜித்ராஜ் (25) , யோகராஜ் (22). அதே பகுதியைச் சேர்ந்தவர் நீதிமோகன். இரு தரப்பினருக்குமிடையே இடப்பிரச்சினை இருந்து வந்துள்ளது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இரு தரப்பினருக்கும் இடையே இடப்பிரச்சினையில் தகராறு ஏற்பட்டது. இதுகுறித்து இரு தரப்பினரும் மண்ணச்சநல்லூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.
புகாரின் பேரில் அஜித் ராஜ், யோகராஜ் மற்றும் நீதி மோகன் ஆகிய மூன்று பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதனைத் தொடர்ந்து அஜித்ராஜ் யோகராஜ் ஆகிய இருவரும் திருச்சி நீதிமன்றத்தில் முன்ஜாமீன் பெற்றதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று இரவு செல்வராஜ் மகன்கள் அஜித்ராஜ் யோகராஜ் மண்ணச்சநல்லூர் காவல் நிலையத்திற்கு வந்தனர். அப்போது எங்கள் மீது போட்ட வழக்கிற்கு நாங்கள் முன் ஜாமீன் பெற்று விட்டோம் முன் ஜாமீன் பெறாமல் வெளியில் இருக்கும் நீதிமோகனை ஏன் இன்னும் கைது செய்யவில்லை என கூறி போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து அஜித் ராஜ் யோகராஜ் இருவரும் தங்கள் கையில் கேனில் வைத்திருந்த பெட்ரோலை தங்கள் மீது ஊற்றி தீக்குளித்து தற்கொலைக்கு முன்றனர்..
இதனை கண்ட போலீசார் அதிர்ச்சி அடைந்து அவர்களை தடுத்து நிறுத்தி பெட்ரோல் கேனை புடுங்கி எறிந்து தற்கொலை முயற்சியை தடுத்து நிறுத்தினர். பின்னர் செல்வராஜ் அவரது மகன்கள் அஜித் ராஜ் யோகராஜ் ஆகிய மூன்று பேர் மீது தற்கொலைக்கு முன்றது போலீசரை பணி செய்யாமல் விடாமல் தடுத்ததாகவும் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.