உப்பிலியபுரத்தை அடுத்துள்ள பச்சபெருமாள்பட்டி ஊராட்சி கோம்பையில் சென்றவாரம் குடும்பத்தகராறு காரணமாக இளம்பெண் கொடூரமாக கொலை செய்யப்பட்டு, கொலையாளிகள் வீட்டைப் பூட்டி விட்டு தப்பிச்சென்றனர். முசிறி காவல்துறை துணை கண்காணிப்பாளர் அருள்மணி அறிவுறுத்தலின் பேரில், துறையூர் இன்ஸ்பெக்டர் விதுன்குமார் தலைமையில் குற்றப்பிரிவு போலீசார் தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளிகளை தேடும் பணியில் ஈடுபட்டனர். நேற்று காலை பச்சபெருமாள்பட்டியில் குற்றவாளிகள் பதுங்கியிருப்பதாக வந்த தகவலின் பேரில் போலீசார் குற்றவாளிகள் மூவரை கைது செய்தனர்
மனைவியை கொலை செய்த பெரியசாமி (32), கொலைக்கு உடந்தையாக இருந்த பெரியசாமியின் தாயார் செல்லம்மாள்(63), பெரியசாமியின் பாட்டனார் போஜன்(78) ஆகிய மூவரும், வீட்டைப் பூட்டி விட்டு கேரளாவில் வசிக்கும் தனது உறவினர் வீட்டுக்கு சென்றுள்ளனர். அங்கு அவர்களது முகவரி சரியாக கிடைக்கப்பெறாததால், ராமேஸ்வரம், ஏர்வாடி ஆகிய ஊர்களுக்கு சென்று விட்டு, கையில் காசில்லாததால், வீட்டிலுள்ள நகையை எடுத்துச் செல்ல கோம்பைக்கு நேற்று முன்தினமிரவு வந்துள்ளனர். தகவலின் பேரில் போலீசார் அவர்களை கைது செய்தனர்.
மூவரையும் கைது செய்த போலீசார், சம்பவ இடத்திற்கு கூட்டிச் சென்று, கொலைக்கான காரணத்தையும், கொலை செய்தது எப்படி என்பதையும் இன்ஸ்பெக்டர் விதுன்குமார் தலைமையில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். கோயம்புத்தூரில் கட்டிட வேலை செய்த தம்பதியினர் இருவரிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. மனைவியின் நடத்தையில் சந்தேகமடைந்த பெரியசாமி, மனைவியையும், மோனிக்ராஜ்(1) மகனையும் அழைத்துக் கொண்டு கோம்பைக்கு வந்துள்ளார்.
சம்பவத்தன்று வழக்கம் போல் கணவன் மனைவியரிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. வாய்தகராறு முற்றிய நிலையில், அருகிலிருந்த பலகையை எடுத்து புஷ்பவள்ளியின் தலையில் பெரியசாமி அடிக்க, வீட்டின் பின்புற சுவரை தாண்டிக்குதித்து தப்பியோட நினைத்த மனைவியை மீண்டும் அழைத்து வந்து தலையணையால் முகத்தில் அமுக்கி கொலை செய்தது விசாரணையில் தெரிய வந்தது.
சம்பவத்தின் போது பெரியசாமியின் தாய் செல்லம்மாள், பாட்டனார் போஜன் ஆகிய இருவரும் வீட்டில் இருந்துள்ளனர். மனைவியை கொலை செய்த பெரியசாமி, கொலைக்கு உடந்தையாக இருந்ததும், கொலையாளியை தப்பிக்க உதவியதற்கும் செல்லம்மாள், போஜன் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்த உப்பிலியபுரம் போலீசார் மூவரையும் கைது செய்துள்ளனர். பெரியசாமியின் அரவணைப்பில் இருந்த சிறுவன் மோனிக்ராஜ், புஷ்பவள்ளியின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.