திருச்சி மாநகராட்சி பகுதிகளில் இறைச்சி கழிவுகளை கொட்டினால் கடும் நடவடிக்கை – ஆணையர் எச்சரிக்கை!!
திருச்சி மாநகராட்சி பகுதிகளில் இறைச்சி கழிவுகளை கொட்டினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி ஆணையர் சிவசுப்பிரமணியன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
திருச்சி மாநகராட்சி பகுதிகளில் செயல்பட்டு வரும் மீன்கடைகள் , கோழி கடைகள் , இறைச்சி கழிவுகள் முதலிய கழிவுகளை ஆங்காங்கே உள்ள நீர்நிலைகள், காலி இடங்கள் மற்றும் சாலை ஓரங்களில் இரவு நேரங்களில் கொட்டி சுகாதார கேடு ஏற்படுத்துவதாக பொது மக்களிடமிருந்து புகார்கள் பெறப்பட்டுள்ளது .
இதை தவிர்க்கும் பொருட்டு திருச்சிராப்பள்ளி மாநகராட்சி பகுதிகளில் உள்ள நுண்உர செயலாக்க மையங்களில் இறைச்சி கழிவுகளை பெறுவதற்கென பிரத்யோக வசதியுடன் தொட்டி வைக்கப்பட்டுள்ளது. அனைத்து இறைச்சி கடை உரிமையாளர்கள் தங்கள் கடைகளில் தினசரி சேகரிக்கும் இறைச்சி கழிவுகளை அருகிலுள்ள நுண்உர செயலாக்க மையங்களில் தங்களது சொந்த பொறுப்பில் நேரடியாக கொண்டு வந்து பதிவு செய்து ஒப்படைக்க வேண்டும் என்றும்,
இறைச்சி கழிவுகளை மேற்கண்ட நுண்உரம் செயலாக்க மையங்களில் ஒப்படைக்காமல் பொது இடங்கள், நீர் நிலைகள், காலி இடங்கள் மற்றும் சாலை ஓரங்களில் கொட்டும் இறைச்சி கடைகளுக்கு அபராதம் விதிப்பதுடன் இறைச்சி கடைகள் பூட்டி சீல் வைக்கப்படும் என மாநகராட்சி ஆணையர் எச்சரித்துள்ளார் .